சிங்கப்பூர்-ஜெர்மனி இடையே பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் லீ சியன் லூங்கும் ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷொல்சும் இணக்கம் தெரிவித்துள்ளனர். புதுப்பிக்கப்பட்ட வரைவுத்திட்டம் இருதரப்புப் பங்காளித்துவத்தை வலுப்படுத்த வகைசெய்கிறது.
தற்காப்பு, கல்வி, பொருளியல் போன்ற வழக்கமான துறைகளுடன், பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற புதிய துறைகளும் அவற்றில் அடங்கும்.
இஸ்தானாவில் நேற்று நேரில் சந்தித்துப் பேசியபின் இரு தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.
அப்போது, வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டி, பருவநிலை மாற்றம், விநியோகத் தொடர் இடையூறுகள் போன்ற பல உலகளாவிய சவால்களுக்கு இடையே சிங்கப்பூரும் ஜெர்மனியும் தங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் என்று அவ்விருவரும் ஒரு கூட்டறிக்கை வாயிலாகத் தெரிவித்தனர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளியல் தொடர்புகள் வலுவாக இருந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் லீ, தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்த இரு நாடுகளும் அணுக்கமாகப் பணியாற்றியதாகவும் சொன்னார்.
சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான தற்காப்பு உறவு நல்ல நிலையில் இருப்பதாகவும் மேம்பட்டு வருவதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் கடற்படையின் இரு நீர்மூழ்கிக் கப்பல்களை அறிமுகப்படுத்துவதற்காக அடுத்த மாதம் ஜெர்மானியத் துறைமுக நகரான கியலுக்குத் தாம் செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.
ரஷ்யா-உக்ரேன் போர் போன்ற வட்டார, உலக அளவிலான பிரச்சினைகள் குறித்தும் திரு ஷொல்சுடன் தாம் கலந்தாலோசித்ததாகப் பிரதமர் லீ தெரிவித்தார்.
ஜெர்மானியப் பிரதமர் ஷொல்ஸ் பேசுகையில், "சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவுகள் அணுக்கமானவை. அவற்றை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இலக்கு கொண்டுள்ளன. இந்த வட்டாரத்தில் சிங்கப்பூர் போன்ற நம்பகமான பங்காளியைக் கொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.
உலகம் பல துருவங்களாகப் பிளவுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட திரு ஷொல்ஸ், அனைத்து நாடுகளுக்கும் பங்காளிகள் தேவை என்றும் அனைவரும் பலதரப்பு ஒத்துழைப்பைச் சார்ந்திருக்கிறோம் என்றும் சொன்னார்.
ஒருநாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் வந்திருந்தார் திரு ஷொல்ஸ். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெர்மானியப் பிரதமராகப் பொறுப்பேற்றபின் அவர் சிங்கப்பூர் வந்தது இதுவே முதன்முறை.
அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.
மின்னிலக்கமயம், அமெரிக்கா-சீனா உறவுநிலை, ஜி20 மாநாடு, உக்ரேன் போர் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து திரு ஷொல்சுடன் பேசியதாக அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திரு ஷொல்சைச் சிறப்பிக்கும் வகையில், இஸ்தானாவில் உள்ள ஒருவகை ஆர்க்கிட் மலருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

