மோனலிசா
குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு 5.5 முதல் 7.5 விழுக்காடு அல்லது குறைந்தது 80 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் பரிந்துரைத்துள்ளது. இவ்வூதிய உயர்வு, மொத்த மாத ஊதியமாக 2,200 வெள்ளிவரை ஈட்டுபவர்களுக்குப் பொருந்தும்.
செலவின அதிகரிப்பையும் நிச்சயமற்ற வணிக வாய்ப்புகளையும் நிறுவனங்கள் எதிர்கொண்டு வருவதால், ஊதிய உயர்வு நியாயமானதாகவும் நிலைத்தன்மை உடையதாகவும் இருத்தல் அவசியம் என்றும் தேசிய சம்பள மன்றம் வலியுறுத்தி இருக்கிறது.
சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்கள், நிச்சயமற்ற வணிகச் சூழல்களைச் சந்தித்திருந்தால் மிதமான ஊதிய உயர்வை வழங்கலாம் என்றும் இருப்பினும் அந்நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மாறுவிகித சம்பளத்தொகை வழங்க வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான ஊதிய வழிகாட்டுக் கூட்டத்தில் மன்றம் குறிப்பிட்டது.
கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தின்போது, சில ஊழியர்கள் ஊதியக் குறைப்பு, ஊதிய முடக்கம், நிறுவனச் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு ஆளாகினர். நெருக்கடியான சூழ்நிலையில் ஊழியர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலும் ஊதிய உயர்வு அமைய வேண்டும் என்றும் மன்றம் தெரிவித்தது. பொருளியல் வளர்ச்சிக்கும் ஊழியர் உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்கும் ஏற்ப நியாயமான ஊதிய உயர்வை வழங்குமாறு நிறுவனங்களுக்கு மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில், சிங்கப்பூரில் பணவீக்கம் இவ்வாண்டு 6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தங்குமிடம் மற்றும் தனியார் போக்குவரத்துக்கான செலவுகளைத் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம் இவ்வாண்டு ஏறத்தாழ 4 விழுக்காடாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 0.9 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊதிய வழிகாட்டி நெறிமுறைகள் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது.
மேலும், நீக்குப்போக்கான சம்பள முறையை அமல்படுத்தாத அனைத்து நிறுவனங்களும் இவ்வாண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, மன்றத்தின் பரிந்துரைகளுக்கு தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) ஆதரவு தெரிவித்துள்ளது. மன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றும்படி நிறுவனங்களை என்டியுசி ஊக்குவிக்கிறது.

