தன்னுடன் வசித்து வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய ஆடவரை டெல்லி காவல்துறை கைதுசெய்தது.
கடந்த மே 18ஆம் தேதி தங்களுக்குள் ஏற்பட்ட சண்டைக்குப்பின் அஃப்தாப் அமீன் பூனவாலா என்ற அந்த ஆடவர், தன் காதலி ஷ்ரதாவை (படத்தில் இருவரும்) கழுத்தை நெரித்துக் கொன்றான். பின்னர் அவரது உடலை 35 துண்டுகளாக்கிய அஃப்தாப், குளிர்சாதனப்பெட்டி வாங்கி அதனுள் வைத்தான்.
அடுத்த 18 நாள்களாக ஒவ்வொரு நாளும் பின்னிரவு 2 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறிய அவன், ஷ்ரதாவின் உடற்பாகங்களை ஒன்றிரண்டாக நகரின் பல பகுதிகளிலும் வீசியெறிந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மும்பையிலுள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அழைப்பு மையத்தில் பணிபுரிந்து வந்தார் 26 வயது ஷ்ரதா. அங்குதான் அஃப்தாப்பை அவர் முதன்முதலில் சந்தித்தார். அவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்தது. அதனை ஷ்ரதாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியேறி டெல்லி சென்ற இருவரும், அங்கு மெஹ்ரோலி பகுதியில் ஒரு வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கினர்.
இந்நிலையில், இம்மாதம் 8ஆம் தேதி தம் மகளைக் காண்பதற்காக டெல்லி சென்ற ஷ்ரதாவின் தந்தை விகாஸ் மதான், தம் மகளின் வீடு பூட்டப்பட்டு இருந்ததைக் கண்டார்.
பின்னர் தம் மகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று மெஹ்ரோலி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காவல்துறை கடந்த சனிக்கிழமை அஃப்தாப்பைக் கைதுசெய்தது.
ஷ்ரதா தம்மைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார் என்றும் அதன் தொடர்பில் தங்களுக்கு இடையே அடிக்கடி சண்டை எழுந்தது என்றும் காவல்துறை விசாரணையின்போது அஃப்தாப் தெரிவித்தான்.
அதனையடுத்து, அஃப்தாப்மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்த டெல்லி காவல்துறை, ஷ்ரதாவின் உடற்பாகங்களைத் தேடி வருகிறது.

