பாலித் தீவிலிருந்து
இர்ஷாத் முஹம்மது
துணைச் செய்தி ஆசிரியர்
உலகளவில் உணவு, எரிசக்தி பிரச்சினையைக் கையாள மூன்று பரிந்துரைகளை ஜி20 உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் முன்வைத்துள்ளார்.
விதிகள் அடிப்படையிலான பன்முனை வணிக முறையை வலுப்படுத்துவது, ஒன்று சேர்ந்து கரியமில வெளியேற்றத்தை குறைப்பது, நீடித்த நிலைத்தன்மைக்கான நிதியாதரவை அதிகரிப்பது ஆகிய மூன்று பரிந்துரை களை அவர் முன்வைத்தார்.
இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடந்துவரும் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களிடம் உரையாற்றிய திரு லீ, விதிகள் அடிப்படையிலான பலஅடுக்கு அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து நாடுகளும் தடையற்ற வகையில் எரிசக்தி, உணவு, விவசாயப் பொருள்களை அனுபவிக்க முடியும், குறிப்பாக நெருக்கடி காலத்தில் என்று கூறினார்.
'ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்' என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளும் சிங்கப்பூர் உள்ளிட்ட நட்பு நாடுகளும் பங்கேற்கின்றன. சிங்கப்பூர் ஜி20 அமைப்பில் உறுப்பினராக இல்லை. எனினும், அதன் கூட்டங்களில் கலந்து கொள்கிறது.
இந்த இரண்டு நாள் மாநாட்டில், உணவு, எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில் முதல் கலந்துரையாடல் நேற்று காலை நடைபெற்றது.
சிறிய தீவான சிங்கப்பூர் உணவு, எரிசக்தித் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பி இருப்பதால், அதன் மூலதனத்தை முறையாக நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தை அது நீண்ட காலமாக அறிந்துள்ளது என்றார் திரு லீ.
உலகளாவிய விநியோகச் சங்கிலியை தங்குதடையில்லாமலும் வைத்திருக்க பங்காளிகளுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் சொன்னார்.
நம்பகத்தன்மையுடனான தள வாட, போக்குவரத்து, எரிசக்தி மையமாக சிங்கப்பூர் அதன் பொறுப்பை சீரிய முறையில் மேற்கொள்ளும் என்று திரு லீ உறுதி அளித்தார்.
உணவு, எரிசக்தி பாதுகாப்பில் நீண்ட கால அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது. வரும் 2050க்குள் கரிமக் கழிவின் பாதிப்பு அறவே இல்லாத நிலையை எட்டும் சிங்கப்பூரின் இலக்கை பிரதமர் லீ குறிப்பிட்டுப் பேசினார்.
கரிம வரியைக் கணிசமாக அதிகரிப்பது, எரிசக்தி துறையின் பசுமைப் புரட்சிக்கு தேசிய ஹைட்ரஜன் உத்தியை செயல்படுத்துவது, ஆசியானுடன் இணைந்து வட்டார எரிசக்தி தொடர்பு கட்டமைப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவது ஆகியவை குறித்து விளக்கினார்.
பசுமை எரிசக்திக்கு மாறுவதற்கு நாடுகளுக்கு நிதி தேவைப்படும் என்பதால் அதற்கான ஆதரவுத் திட்டங்கள் உருவாகவேண்டும் என்றார் திரு லீ.
ஆசிய மேம்பாட்டு வங்கியின் எரிசக்தி மாற்றுத் திட்டத்தை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தனியார் துறை முதலீடுகளும் தேவை என்பதைச் சுட்டினார்.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான ஆசிய தீர்வுகள் வடிவமைப்பு மானியத்தை சிங்கப்பூர் நாணய ஆணையம் உருவாக்கியுள்ளதைச் சுட்டிய திரு லீ, நீடித்த நிலைத்தன்மையுடனான உள்கட்டமைப்புத் திட்டங்களில் தனியார் துறையின் பங்களிப்புக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
இருதரப்புச் சந்திப்புகள்
ஜி20 உச்சநிலை மாநாட்டு கலந்துரையாடல்களுக்கு இடையே இருதரப்பு சந்திப்புகளையும் பிரதமர் லீ மேற்கொண்டார்.
ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செசுடன் மின்னிலக்கமயம், அறிவார்ந்த நகர மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவது குறித்து பிரதமர் லீ பேச்சு நடத்தினார்.
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டெயுடன் சந்திப்பு நடத்திய திரு லீ, வட்டார, உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பேசியதாகக் கூறினார்.

