கிட்டத்தட்ட 2.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் வரும் டிசம்பரில் $700 வரை ரொக்கத் தொகையைப் பெறுவர். இரு வெவ்வேறு திட்டங்களுக்காக இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பொருள் சேவை வரி உயர்வின் பாதிப்பையும் உயரும் வாழ்க்கைச் செலவினத்தையும் சமாளிக்க மக்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் அறிவித்துள்ள உதவித் தொகுப்புத் திட்டங்களின் ஒரு பகுதி இந்த உதவித் திட்டங்கள்.
ஒரே முறை வழங்கப்படும் வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகையாக ஏறக்குறைய 2.5 மில்லியன் சிங்கப்பூர் பெரியவர்கள் $500 வரை பெறுவர். இத்தொகை அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட 1.5 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அதனை அறிவித்திருந்தார்.
அத்துடன், கிட்டத்தட்ட 2.9 மில்லியன் சிங்கப்பூர் பெரியவர்களுக்கு உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் $200 வரையிலான ரொக்கம் வழங்கப்படவுள்ளது.
பணவீக்கம் தற்போது இருக்கும் சூழலிலும், பொருள் சேவை வரி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஐந்தாண்டுகளுக்கு ஈடுகட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்கள் உதவும்.
குறைந்த வருமானக் குடும்பங்கள் பத்தாண்டுகளுக்குக் கூடுதல் செலவுகளைச் சமாளிக்க இத்திட்டம் உதவும் என்று நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
இவ்வாண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை முதல் கட்ட உதவித் தொகை வழங்கப்படும்.
உத்தரவாத தொகுப்புத் திட்டத்தில் கூடுதலாக $1.4 பில்லியன் செலுத்தப்படும் என்று திரு வோங் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக $6.6 பில்லியனாக இருந்த அத்தொகை, பின்னர் $8 பில்லியனாக அதிகரிக்கப்பட்டது. அது பற்றிய விவரங்கள் 2023 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் தகுதிபெற்ற குடும்பங்கள் வழக்கமாகப் பெறும் யு-சேவ் கட்டணத் தள்ளுபடிக்கும் மேலாக, பொதுப் பயனீட்டுக் கட்டணங்களை ஈடுகட்ட $95 வரையிலான கூடுதல் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு யு-சேவ் கட்டணக் கழிவைப் பெறுவர். அடுத்த ஆண்டு ஜனவரியில் இது வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் $300 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டுகளையும் பெறும். அவற்றை திட்டத்தில் பங்கேற்கும் அக்கம்பக்கக்கடைகள், உணவங்காடிக் கடைகள், பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்.
வரும் 2023 பிப்ரவரியில் குறைந்த வருமானம் பெறும் சிங்கப்பூர் முதியவர்கள் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு ரொக்கத் (முதியவர்களுக்கான போனஸ்) திட்டத்தின்கீழ், $300 வரையிலான ரொக்கத் தொகையைப் பெறுவர்.
அதனுடன், தகுதிபெற்ற 55 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள சிங்கப்பூரர்கள், 20 அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள சிங்கப்பூரர்கள் ஆகியோருக்கு உத்தரவாதத் தொகுப்பு மெடிசேவ் திட்டத்தின்கீழ், அவர்களது மத்திய சேம நிதி மெடிசேவ் கணக்கில் $150 செலுத்தப்படும்.
பெறுநர்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்ட பின்னர் சிங்பாஸ் செயலி அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். வாட்ஸ்அப் வழியாகத் தெரிவிக்கப்படாது என்று நிதி அமைச்சு கூறியது.

