மூன்று முதன்மை வட்டார வீட்டுத் திட்டங்களில் பிடிஒ வீடுகள் விற்பனைக்கு வரும்

மூன்று முதன்மை வட்டார வீட்டுத் திட்டங்களில் பிடிஒ வீடுகள் விற்பனைக்கு வரும்

1 mins read
a278123a-4699-4f6a-b60e-0ff0932cea54
படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வரும் 23ஆம் தேதி 9,500க்கும் அதிகமான தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஒ) வீடுகளை விற்பனைக்கு விடவுள்ளது.

அதற்கான பத்து வீட்டுத் திட்டங்களில் மூன்று, முதன்மை வட்டார வீட்டுத் திட்டத்தின்கீழ் கட்டப்படும்.

இரண்டு வீட்டுத் திட்டங்கள் குயின்ஸ்டவுன் வட்டாரத்தில் அமைந்திருக்கும். மூன்றாவது காலாங்/வாம்போவில் கட்டப்படும். மூன்றுமே முதிர்ச்சியடைந்த வட்டாரங்கள் ஆகும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஃபேஸ்புக்கில் இதைத் தெரிவித்தார்.

முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தில் கட்டப்படும் பிடிஒ வீடுகளை வாங்குவோர் முதன்முறையாக சந்தையில் வீட்டை விற்கும்போது, அதன் விலையில் ஒரு பகுதியை வீவகவிடம் திருப்பித் தர வேண்டும்.

மேலும், பத்தாண்டுகள் வீட்டில் வசித்த பின்னர்தான் அவர்கள் வீட்டை மறுவிற்பனைச் சந்தையில் விற்க முடியும்.

வழக்கமான பிடிஒ வீடுகளுக்கு இந்த நிபந்தனைகள் இல்லை.

மற்ற வீட்டுத் திட்டங்கள் குயின்ஸ்டவுன், ஈசூன், தெங்கா, புக்கிட் பாத்தோக் உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும்.