இம்மாதம் 9ஆம் தேதி இரவு 7 மணிவாக்கில், புளோக் 2, பீச் ரோட்டில் அமைந்துள்ள கீழ்த்தளக் கடையில் 27 வயது ஆங் சி யிங்கைக் கொலை செய்ததாக, கேலப் ஜோஷுவா சாய் சண்முகம் எனும் 50 வயது ஆடவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காணாமற்போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த திருவாட்டி ஆங் சென்ற ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்தில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பதிவுகளில் இருந்து உயிரிழந்த மாதும் இந்த ஆடவரும் 'ஸ்மார்ட் கிளிக் சர்விசஸ்' எனும் புதுப்பிப்பு நிறுவனத்தின் இயக்குநர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பெனின்சுலா பிளாசா முகவரியில் செயல்படும் இந்நிறுவனத்திற்கு சிங்கப்பூரர்களான இவ்விருவரும் சென்ற ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இயக்குநர்கள் எனப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக, பீச் ரோடு கடையில் இயற்கைக்கு மாறான மரண சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. உயிரிழந்த பெண், இம்மாதம் 10ஆம் தேதி காணாமற்போனதாகப் புகார் அளிக்கப்பட்ட பெண் எனக் கண்டறியப்பட்டதுடன் இந்த சம்பவத்தில் 50 வயது ஆடவருக்குத் தொடர்பிருப்பதாகவும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால், ஆடவர் இம்மாதம் 10ஆம் தேதி மலேசியா சென்றுவிட்டதால் அரச மலேசியக் காவல்படையின் உதவி நாடப்பட்டது.
சென்ற புதன்கிழமை ஜோகூரில் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சாய், சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இம்மாதம் 9ஆம் தேதி முதல் திருவாட்டி ஆங்கைக் காணவில்லை என்றும் அவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் பகிரும்படியும் ஆங்கின் குடும்பத்தினரும் நண்பர்களும் சமூக ஊடகங்கள் மூலம் கேட்டுக்கொண்டனர்.
இம்மாதம் 9ஆம் தேதி, தான் வீடு திரும்பப் போவதில்லை எனக் கூறும் குறுஞ்செய்தியைத் திருவாட்டி ஆங் தன் தாயாருக்கு அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
சென்ற செவ்வாய்க்கிழமை மண்டாய் தகனசாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
சாய் மீது சாங்கி பொது மருத்துவமனையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
சாய் ஏன் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது குறித்துத் தகவல் இல்லை என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.
இவ்வழக்கு இம்மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் சட்டத்தின்கீழ், கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

