மலேசியத் தேர்தல்: பிரசார நடவடிக்கைகளுக்கு இன்று தடை

3 mins read

மலே­சிய நாடா­ளு­மன்­றத்­துக்­கான 15ஆவது பொதுத் தேர்­த­லில் இன்று வாக்­க­ளிப்பு நாள்.

இத­னை­யொட்டி, நேற்று இரவு 11.59 மணி­யு­டன் பிர­சா­ரங்­கள் நிறைவு­பெற்­றுள்­ளன. தேர்­தல் பிர­சா­ரம் இம்­மா­தம் 5ஆம் தேதி தொடங்­கி­யது.

மலே­சிய நாடா­ளு­மன்­றத்­துக்­கான 222 இடங்­க­ளுக்­கும் பேராக், பாகாங், பெர்­லிஸ், சாபா ஆகிய சட்­ட­மன்­றங்­க­ளுக்­கான மொத்­தம் 59 இடங்­க­ளுக்­கும் இன்று தேர்­தல் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

மலே­சி­யா­வின் தேர்­தல் சட்­டத்­தின்­கீழ், கூட்­டங்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தல், நடத்­து­தல், அவற்­றுக்கு ஏற்­பாடு செய்­தல், பொது­மக்­க­ளிடம் உரை­யாற்­று­தல் உள்­ளிட்­ட­வற்றை நேற்று இரவு மணி 11.59க்குப் பிறகு மேற்­கொள்­வது குற்­ற­மா­கும்.

வாக்­க­ளிப்பு நாளில் அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக ஒலி­பெ­ருக்­கி­களை விநி­யோ­கித்­தல், வாக்­குச் சாவ­டி­க­ளுக்­குள் கட்சி அலு­வ­ல­கங்­களை அமைத்­தல் ஆகி­ய­வை­யும் குற்­ற­மா­கக் கரு­தப்­படும்.

இம்­முறை மலே­சி­யா­வின் பொதுத் தேர்­த­லில் வர­லாறு காணாத அள­விற்கு, பல்­வேறு அர­சி­யல் கட்­சி­க­ளைச் சேர்ந்த மொத்­தம் 945 வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கு­கின்­ற­னர்.

முன்­ன­தாக, வாக்­க­ளிப்பு நாள் வரை, வன்­மு­றைச் சம்­ப­வங்­களோ சின­மூட்­டும் நட­வ­டிக்­கை­களோ அதி­க­மின்றி தேர்­தல் பிர­சா­ரம் நல்­ல­மு­றை­யில் இடம்­பெ­றும் என்று பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்­தார். நாட்­டின் 15வது பொதுத் தேர்­தல் தொடர்­பில் அர­சி­யல் உரை­யாற்­று­வ­தற்­கான மொத்­தம் 2,148 அனு­ம­தி­கள் வழங்­கப்­பட்­ட­தாக மலே­சி­யக் காவல்­துறை தெரி­வித்­தது.

பரா­ம­ரிப்பு அர­சாங்­கத்­தின் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், முன்­னாள் பிர­த­மர் முகைதீன் யாசின், தேசிய முன்னணி தலைவர் ஸாஹிட் ஹமிடி, பக்­கத்­தான் ஹரப்­பான் தரப்­பின் அன்­வார் இப்­ரா­ஹிம் ஆகி­யோர் இம்­முறை மலே­சி­யப் பிர­த­மர் பத­வி­யைக் குறி­வைத்­துக் கள­மி­றங்­கி­யுள்­ள­னர்.

வலு­வான அர­சி­யல் கட்­சி­கள் அனல் பறக்­கும் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்ட வேளை­யில் ஏறத்­தாழ 108 சுயேச்சை வேட்­பா­ளர்­களும் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

நான்கு மில்­லி­ய­னுக்கு அதி­க­மான இளை­யர்­கள் இந்­தத் தேர்­த­லில் வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெற்­றுள்­ள­னர். மொத்த வாக்­கா­ளர் எண்­ணிக்­கை­யில் இது ஐந்­தில் ஒரு பகுதி எனக் கரு­தப்­ப­டு­கிறது.

மலே­சிய அர­சி­யல்­வா­தி­கள் அடிக்­கடி கையி­லெ­டுக்­கும் இன, சமய அடிப்­ப­டை­யி­லான பிரச்­சி­னை­கள் குறித்து இவர்­க­ளுக்கு அதி­கம் கவ­லை­யில்லை. இளையர்­களின் முன்­னு­ரி­மை­கள் மாறு­பட்­டவை என்­ப­தால் இவர்­க­ளின் வாக்­கு­கள் தேர்­தல் முடி­வு­களில் பெரிய வித்­தி­யா­சத்­திற்கு வித்­தி­டும் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

இளை­யர்­கள் ஆத­ர­வைப் பெறும் முயற்­சி­யாக இம்­முறை 'டிக்­டாக்' உள்­ளிட்ட சமூக ஊட­கங்­களில் புகழ்­பெற்­ற­வர்­கள் வாயி­லா­கப் பிர­சா­ரங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதை அவர்­கள் சுட்­டி­னர்.

இந்த முயற்­சி­கள் எல்­லாம் ஒரு புற­மி­ருக்க, வாக்­க­ளிப்பு நாளில் இயற்கை ஒத்­து­ழைக்க வேண்­டுமே என்ற கவ­லை­யும் நில­வு­கிறது.

பரா­ம­ரிப்பு அர­சாங்­கம் பரு­வ­மழைக் காலத்­தில் தேர்­தலை நடத்­து­வது குறித்­துப் பல­ரும் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர். பெரும்­பா­லான மாநிலங்­களில் வாக்­க­ளிப்பு நாளான இன்று கன­ம­ழை­யும் இடி­யு­டன் கூடிய மழை­யும் பெய்­யக்­கூ­டும் என்று மலே­சிய வானிலை ஆய்­வகம் முன்­னு­ரைத்­துள்­ளது.

இன்­றைய தேர்­த­லில் எந்­தக் கூட்­டணி வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்­தா­லும் பொரு­ளி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கும் அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைச் செல­வி­னப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் காலம் தாழ்த்­தா­மல் விரை­வில் தீர்­வு­காண வேண்­டும் என்­பதே மலே­சி­யர்­கள் அனை­வரின் விருப்­பம்.

ஏறத்­தாழ 20 மில்­லி­யன் வாக்­கா­ளர்­கள் வாக்­க­ளிக்­க­வி­ருக்­கும் இன்­றைய தேர்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் சுமு­க­மான முறை­யில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நேற்­றி­ரவு மலே­சிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக பொதுப்போக்குவரத்தில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.