மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 14 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ள நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மலேசிய தேர்தல் வரலாற்றிலேயே ஆகக் கடுமையான போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன. அண்மைய ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக ஆட்சியமைக்க மூன்று முக்கியக் கூட்டணிகளும் பல சிறிய கட்சிகளும் முற்படுகின்றன.
இந்நிலையில், சரவாக்கின் இகான் நாடாளுமன்றத் தொகுதிக்கான முதல் அதிகாரபூர்வ முடிவைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கபுங்கான் சரவாக் கட்சியைச் சேர்ந்த திரு அகமது ஜோனி ஸவாவி அத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்.
மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூரின் கோம்பாக் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷஹ்ரியும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் அஸ்மின் அலியும் போட்டியிடுகின்றனர். இரவு 8.17 மணி நிலவரப்படி, திரு அஸ்மினைவிட திரு அமிருடின் சுமார் 4,000 வாக்குகள் கூடுதலாக பெற்றிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.
மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட சாதனை அளவாக 945 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்தத் தேர்தலில் வாக்களிக்க 21 மில்லியனுக்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளனர்.
எனினும், இன்று சனிக்கிழமை நடந்தேறிய வாக்குப்பதிவில் 220 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. மோசமான வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக சரவாக்கின் பராம் தொகுதியில் வாக்களிப்பு நிறுத்தப்பட்டது. கெடாவின் பாடாங் சிராயில் டிசம்பர் 7ஆம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளரும் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு கருப்பையா முத்துசாமி புதன்கிழமை காலமானதே இதற்குக் காரணம்.


