மலேசிய பொதுத் தேர்தலில் வரலாறு காணா தோல்வி கண்டதை அடுத்து அம்னோ தலைவர் பதவியில் இருந்து
ஸாஹிட் ஹமிடி உடனடியாக விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஜோகூர் முதல்வரும் அம்னோ கட்சியின் உச்ச மன்ற உறுப்பினருமான ஓன் ஹாஃபிஸ் கனி, ஃபேஸ்புக்கில் இது பற்றி தெரிவித்தபோது, 2018 தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேஷனல் தோல்வி கண்டதை அடுத்து அம்னோ தலைவர் பதவியில் இருந்து நஜிப் ரசாக் விலகியதைச் சுட்டிக்காட்டி, அதேபோல ஸாஹிட்டும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மலாய் அரசியல் சுனாமியில் அம்னோ அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அம்னோ தகவல் துறை தலைவரான ஷாரில் ஹம்டான், நேற்று பதவி விலகினார். அதேபோல, ஸாஹிட்டும் விலக வேண்டும் என்று அவர் குரல்கொடுத்தார்.
அதேபோல, மலேசிய சீனர் சங்கமும் குரல்கொடுத்து இருக்கிறது. ஸாஹிட் தலைமைத்துவத்தில் நம்பிக்கை போய்விட்டதாக அந்தச் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மலேசியப் பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெறும் 30 இடங்களை மட்டுமே வென்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

