சியாஞ்சுர்: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவாவை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்ததாகவும் 700 பேர் வரை காயமுற்றதாகவும் கூறப்பட்டது. மேற்கு ஜாவா ஆளுநர் ரிட்வான் கமில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் அதைத் தெரிவித்தார்.
ரிக்டர் அளவில் 5.6 என நிலநடுக்கம் பதிவானது. பல கட்டடங்கள் சேதமுற்றதுடன் தலைநகர் ஜகார்த்தா வரை நில அதிர்வுகள் உணரப்பட்டன.
கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் மாண்டவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு ஜாவாவின் சியாஞ்சுர் எனும் பகுதியில் இந்தோனீசிய நேரப்படி பிற்பகல் 1.21 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2.21 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது.
பத்து முதல் 15 வினாடிகள் வரை வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். சமூக ஊடகங்களில் வலம் வந்த காணொளிகள், மக்கள் பீதியடைந்து அலறியதைக் காட்டின. சிலருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் வழிந்தது. பல வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்தன.
300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக இந்தோனீசியாவின் பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறியது. நிலநடுக்கம் ஏற்பட்ட சியாஞ்சுர் மக்கள் நெரிசலாக வாழுமிடம் ஆகும். வலுவில்லா கட்டடங்கள் நிறைந்த அப்பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகளும் ஏற்படும் என்றும் கூறப்பட்டது.
மேற்கு ஜாவாவில் சுக்காபுமி, போகோர், பாண்டுங் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. கட்டடங்கள் குலுங்குவதையும் அறைகலன்கள் நகர்வதையும் தாங்கள் உணர்ந்ததாக சில ஜகார்த்தாவாசிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

