தென் தாய்லாந்தில் உள்ள காவல்துறை வளாகம் ஒன்றினுள் இன்று செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் காவல்துறை அதிகாரியாவார்.
இதில் காயமுற்ற குறைந்தது 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் காவல்துறை அதிகாரிகளும் குடிமக்களும் அடங்குவர் என்று மருத்துவமனை இயக்குநர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.
தாழ்வான உயரம் கொண்ட அந்தக் காவல்துறை வளாகத்தில் தீப்பற்றி எரிந்த கார் ஒன்றிலிருந்து கறும்புகை வெளியேறுவதை சமூக ஊடகங்களில் வலம்வரும் புகைப்படங்கள் காண்பித்தன. அந்தப் பகுதி வழியாக சென்ற வாகனங்களைக் காவல்துறையினர் திசைதிருப்பி விடுவதையும் படங்கள் காட்டின.
"கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளை நாங்கள் இன்னும் அப்புறப்படுத்தி வருகிறோம். தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்," என்று நராத்திவாட் மாநில காவல்துறை துணை ஆணையர் நித்தி சுக்சான் தெரிவித்தார்.

