ஐக்கிய அரசாங்கத்தை அமைக்கும்படி மலேசிய மாமன்னர் கேட்டுக்கொண்டுள்ளதாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
தம்மையும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசினையும் சந்தித்துப் பேசிய பிறகு மாமன்னர் இவ்வாறு கூறியதாக திரு அன்வார் சொன்னார்.
"அமைக்கப்படும் அரசாங்கம் அனைத்துக் கட்சிகள், இனங்கள், சமயங்கள் மற்றும் வட்டாரங்களைப் பிரதிநிதிக்க வேண்டும்" என்று மாமன்னர் அறிவுறுத்தியுள்ளதாக திரு அன்வார் கூறினார்.
"ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களுக்கும் மாமன்னர் இறுதி முடிவை எடுக்கவும் சற்று காலஅவகாசம் கொடுங்கள்.
"யார் பிரதமராவது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. காலியிடம் உள்ளது. அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன," என்றார் அவர்.
இதற்கிடையே, தேசிய முன்னணிக் கூட்டணியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாமன்னர் நாளை புதன்கிழமை காலை தனித்தனியாக சந்திக்கவுள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கோரும் தலைவர் யார் என்பதை உறுதிப்படுத்த இந்தச் சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.

