வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இதுவரை இல்லா அளவிற்கு 9,655 பிடிஓ வீடுகளை நேற்று விற்பனைக்குக் கொடுத்தது.
பிடிஓ முறை 2002ல் நடப்புக்கு வந்தது. அது முதல் இந்த அளவுக்கு ஆக அதிக எண்ணிக்கையில் வீடுகள் ஒரே தவணையில் விற்பனைக்குக் கொடுக்கப்படுவது இதுவே முதல்முறை.
அந்த வீடுகள் ஐந்து பேட்டைகளில் இடம்பெறும் 10 வீடமைப்புத் திட்டங்களில் அமைந்து இருக்கும்.
அவற்றில் குவீன்ஸ்டவுனில் இடம்பெறும் இரண்டு திட்ட வீடுகளும் காலாங்/வாம்போவில் கட்டப்படும் ஒரு திட்ட வீடுகளும் பிரதான இட வீடுகளாக (பிஎல்ஹெச்) இருக்கும்.
இந்த வீடுகளை விற்கும்போது 6% மானியத்தைத் திருப்பிக் கழகத்திடம் கொடுத்துவிட வேண்டி இருக்கும். இவற்றோடு, எஞ்சிய வீடுகள் விற்பனைத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் கடைசியாக இரண்டாவது தடவையாக மேலும் 1,071 வீடுகள் விற்பனைக்குக் கொடுக்கப்படுகின்றன.
இவற்றையும் சேர்த்து இந்த ஆண்டில் மேலும் மொத்தம் 10,726 புதிய வீடுகளை வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு சிங்கப்பூரர்களுக்குக் கிடைத்து இருக்கிறது.
வீட்டை வாங்குவோருக்கு வீட்டை தேர்வு செய்ய மேலும் காலஅவகாசம் கிடைக்கும் வகையில் விண்ணப்பக் காலம் ஒன்பது நாள்களாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக விண்ணப்பக் கால அளவு ஏழு நாட்களாக இருக்கும். வீவக இந்த விவரங்களைத் தெரிவித்தது.
இந்த ஆண்டில் கழகம் 23,184 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு கொடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டில் 17,000 வீடுகளாக இருந்தது.
குவீன்ஸ்டவுன் முதிர்ச்சிஅடைந்த பேட்டையில் இரண்டு திட்டங்களில் கட்டப்படும் பிஎல்ஹெச் மாதிரி வீடுகளைப் பொறுத்தவரை வாங்க, விற்க கடும் நிபந்தனைகள் இடம்பெறும்.
அந்த இரு திட்டங்களில் ஆகப் பெரிய திட்டம் உலு பாண்டான் பேங்க்சில் கட்டப்படும். அதன்படி ஏழு புளோக்குகளில் 1,330 மூவறை, நாலறை வீடுகள் அமைந்திருக்கும்.
அந்த வீடுகள் டோவர் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கும்.
மூவறை வீட்டின் விலை மானியமின்றி $362,000லிருந்து $504,000 இருக்கும். நாலறை வீட்டின் விலை $546,000லிருந்து $725,000 வரைப் பட்டு இருக்கும்.
அந்த வீடுகளை வாங்குவோர் ஏறக்குறைய 71 மாதம் காத்திருக்க வேண்டும். அந்தத் திட்ட வீடுகள் 2029 மூன்றாவது காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
குவீன்ஸ்டவுனில் இடம்பெறும் பிஎல்ஹெச் இரண்டாம் திட்டம் வீடுகள் கிம் மோ நட்டுராவில் கட்டப்படுகின்றன. அங்கு நான்கு புளோக்குகளில் 991 ஈரறை நீக்குப்போக்கு வீடுகள், மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படும்.
மூவறை வீட்டின் விலை $364,000லிருந்து $487,000 இருக்கும். நாலறை வீட்டின் விலை $516,000லிருந்து $696,000 இருக்கும். இந்த வீடுகளை வாங்குவோர் 53 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
காலாங்/வாம்போவில் காலாங் ஹாரிசனில் ஆகச் சிறிய பிஎல்ஹெச் திட்ட வீடுகள் இடம்பெறும். காலாங் எம்ஆர்டி நிலையத்திற்குப் பக்கத்தில் மூன்று புளோக்குகளில் 477 மூவறை, நாலறை வீடுகள் எழும்பும்.
மூவறை வீட்டின் விலை $335,000லிருந்து $447,000 இருக்கும். நாலறை வீட்டின் விலை $509,000லிருந்து $690,000 இருக்கும். இந்த வீடுகளை வாங்குவோர் சுமார் 53 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இப்போது விற்பனைக்கு விடப்பட்டு உள்ள வீடுகளில் முதிர்ச்சி அடையாத மூன்று பேட்டைகளில் இடம்பெறும் ஆறு பிடிஓ திட்ட வீடுகளும் உள்ளடங்கும்.
கட்டப்படவிருக்கின்ற நாலறை, அதற்கும் பெரிய வீடுகளில் குறைந்தபட்சம் 95 விழுக்காட்டு வீடுகள் முதல்முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்காக ஒதுக்கப்படும்.
அதேபோல, மூவறை வீடுகளில் 85% அவர்களுக்காக ஒதுக்கப்படும்.
இப்போது விற்பனைக்கு வந்திருக்கின்ற முதிர்ச்சியடையாத பேட்டைகளில் கட்டப்படும் நாலறை வீடுகள் அனைத்துமே $400,000க்கும் குறைவான விலை உள்ளவை என்பதை கழகம் சுட்டியது.
வீடுகளுக்கான விண்ணப்பங்கள் வீவக வீட்டு இணைய நுழைவாயிலில் டிசம்பர் 1ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைந்துவிடும். குலுக்கல் முறைப்படி வீடுகள் ஒதுக்கப்படும்.
வீடுகளுக்கான தேவையைத் தொடர்ந்து தான் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட கழகம், 2021 முதல் 2025வரை தேவையெனில் மொத்தம் 100,000 வீடுகள் வரை விற்பனைக்குக் கொடுப்பதற்குத் தான் ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

