பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியாவின் 10வது பிரதமராக இன்று வியாழக்கிழமை பதவி ஏற்றார். இதன்மூலம் பிரதமராக வேண்டும் என்ற இவரது 24 ஆண்டுகால காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
மலேசியாவின் ஒன்பது மாநில மன்னர்களைச் சந்தித்த பிறகு பிரதமர் பதவிக்கு திரு அன்வாரை நியமிக்க மாமன்னர் முடிவெடுத்தார்.
"மன்னர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், மலேசியாவின் 10வது பிரதமராக அன்வார் இப்ராகிமை நியமிக்க மாமன்னர் ஒப்புதல் அளித்தார்," என்று அரச தலைமை அதிகாரி ஃபாட்லி சம்சுதீன் கூறினார்.
அரசாங்கத்துக்கான தலைமைச் செயலாளர், தலைமை நீதிபதி, தலைமைச் சட்ட அதிகாரி, நாடாளுமன்றத்தின் இரு அவை நாயகர்கள், பக்கத்தான் ஹரப்பான், தேசிய முன்னணிக் கூட்டணித் தலைவர்கள் உள்ளிட்டோர் திரு அன்வாரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
தம்முடைய மனைவியும் முன்னாள் துணைப் பிரதமருமான வான் அஸிஸா வான் இஸ்மாயிலுக்கு பக்கத்தில் திரு அன்வார் அமர்ந்திருந்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நூருல் இஸா அன்வார் உட்பட இத்தம்பதியரின் ஆறு பிள்ளைகளும் உடனிருந்தனர்.

