தாம் வழிநடத்தும் ஐக்கிய அரசாங்கத்தில் சேர பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தாம் அழைப்பு விடுக்கப்போவதாக மலேசியாவின் புதிய பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
பிரதமராக பதவியேற்று முதன்முறையாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், மலாய் பெரும்பான்மையினரின் உரிமைகளும் மலேசியாவின் அதிகாரபூர்வ சமயமான இஸ்லாமும் பாதுகாக்கப்படும் என்று கூறினார்.
அதேவேளையில், அனைத்து இனக் குழுக்களின் உரிமைகளையும் மலேசியப் பிரதேசங்களையும் தாம் பாதுகாக்கப்போவதாக திரு அன்வார் கூறினார்.
பொதுத் தேர்தலில் 82 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றுள்ள தமது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியுடன், 30 தொகுதிகளில் வென்றுள்ள தேசிய முன்னணியும் 23 தொகுதிகளில் வென்றுள்ள கபுங்கான் சரவாக் கட்சியும் தமது ஐக்கிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளதாக திரு அன்வார் தெரிவித்தார்.

