மலேசியாவின் புதிய பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை முதல் நாளாக பணியைத் தொடங்கியுள்ள திரு அன்வார் இப்ராகிம், வாழக்கைச் செலவினத்தைச் சமாளிப்பதில் தாம் முன்னுரிமை அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 10வது பிரதமராக பதவியேற்ற இவர், இதற்கு முன்பிருந்த அமைச்சரவைகளைவிட தாம் சிறிய அமைச்சரவையைக் கொண்டிருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது கூட்டணி அரசாங்கத்திற்காக அமைச்சரவை நியமனங்களை திரு அன்வார் இன்னும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, பிரதமராக திரு அன்வார் நியமிக்கப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். தமது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, எதிர்க்கட்சிக் கூட்டணியாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
திரு அன்வாருக்கு எதிராக பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு முகைதீன், திரு அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்டதை முதலில் ஏற்க மறுத்தார். நாடாளுமன்றத்தில் திரு அன்வார் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு திரு முகைதீன் சவால் விடுத்திருந்தார்.

