பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சிக் கூட்டணியாக செயல்படும்; அன்வார் அரசின் குறை, நிறைகளைக் கண்காணிக்கும்

பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சிக் கூட்டணியாக செயல்படும்; அன்வார் அரசின் குறை, நிறைகளைக் கண்காணிக்கும்

2 mins read
3cf9acb6-659c-4578-ab2d-c9f4c8a698d6
நவம்பர் 24ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ள கட்சியின் தலைமையகத்திற்கு வரும் திரு முகைதீன் யாசின். படம்: ஏஎஃப்பி -

தமது ஐக்கிய அரசாங்கத்தில் சேர மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் விடுத்த அழைப்பை ஏற்க பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது. அது தொடர்ந்து எதிர்க்கட்சிக் கூட்டணியாக இருக்கும் என்று அதன் தலைவர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசின் குறை, நிறைகளைக் கண்காணித்து அதற்கேற்றபடி தமது கூட்டணி செயல்படும் என்று திரு முகைதீன் இன்று வெள்ளிக்கிழமை சொன்னார்.

"பெரிக்காத்தான் நேஷனல், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் வழி மக்கள் குரலை எதிரொலிக்கும்.

"மக்கள் நலனுக்கும் நாட்டின் வளப்பத்துக்கும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்," என்று திரு முகைதீன் விளக்கினார்.

முன்னதாக, திரு அன்வாரின் ஐக்கிய அரசாங்கத்தில் சேர அவரது அழைப்பை ஏற்பதா என்பது பற்றி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தான் கலந்தாலோசிக்கப்போவதாக மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) கூறியிருந்தது.

இதுபற்றிக் கூறிய பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளரும் முன்னாள் சட்ட அமைச்சருமான தாக்கியுடின் ஹசான், "பிரதமர் தனது ஐக்கிய அரசாங்கத்தில் சேர அழைப்பு விடுத்திருப்பதற்கு நாங்கள் நன்றி தெரித்துக்கொள்கிறோம்," என்றார்.

தொடர்ந்து பேசிய திரு தாக்கியுடின், 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் தலைமைத்துவம் தொடர்பாக எழுந்த சிக்கல் சுமுகமாகவும் அமைதியாகவும் தீர்க்கப்பட்டதற்கு பாஸ் நன்றிக்கடன் பட்டுள்ளது. இதில் தங்கள் கட்சி மாமன்னரின் முடிவை ஏற்பதாக அவர் கூறினார்.

"மாமன்னரை மதிப்பதுடன் அவர் தனக்குள்ள அதிகாரத்தின்படி, குறிப்பாக கூட்டரசின் அரசியல் சாசனத்தின்படி, அவர் பிரதமர் தேர்வில் எடுத்த முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்," என்று அவர் சொன்னார்.

24 ஆண்டுகள் காத்திருந்த பின் மலேசியாவின் 10வது பிரதமராக திரு அன்வார், 75, நேற்று வியாழக்கிழமை பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவருமான அவர், டிசம்பர் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டும் திட்டத்தில் உள்ளார். அன்று நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக தமது அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார் திரு அன்வார்.

மலேசிய மாமன்னர், திரு அன்வாரை பிரதமர் பதவிக்காக தேர்வு செய்த முடிவை ஏற்க பெரிக்காத்தான் கூட்டணியின் தலைவர் முகைதீன் யாசின் மறுத்ததைத் தொடர்ந்து மேற்கூறியபடி நடந்தது.

இது குறித்துப் பேசியிருந்த திரு முகைதீன், தமக்கு 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதற்கான ஆதாரத்தை மாமன்னரிடம் தாம் சமர்ப்பித்துள்ளதாகக் கூறி பிரதமர் பதவிக்கு அன்வார் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தார்.