தேசிய தின அணிவகுப்புக்குப் பெயர்போன மரினா பே மிதக்கும் மேடை புது வடிவம் பெறுவதற்கு முன்னர், அங்கு இறுதியாக அணிவகுப்பு நடைபெற்றிருக்கிறது. அடிப்படை ராணுவப் பயிற்சியை முடித்த சுமார் 4,000 தேசிய சேவையாளர்கள், 350 தயார்நிலை போர்க்காலப் படைவீரர்கள் ஆகியோரின் பயிற்சி முடிவுற்றதைக் குறிக்க அணிவகுப்பு நடந்தது.
தேசிய சேவையின் 55வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும் அது அமைந்தது.
தேசிய சேவைக் கடமைகளை அடுத்தத் தலைமுறையிடம் ஒப் படைப்பதைக் குறிக்கும் வகையில் மூன்றாம் சார்ஜண்ட் சுஹாய்ரி சம்சுதீன், நாட்டுக்கொடியை தமது முன்னாள் உயர்நிலைப் பள்ளி மாணவர் லிம் வீ ஹோங்கிடம் ஒப்படைத்தார்.
மரினா பே மிதக்கும் மேடை அடுத்த ஆண்டு தேசிய சேவை சதுக்கமாக மாற்றப்படவுள்ளது.
தேசிய சேவையை நினைவில் நிறுத்தும் நிரந்தர இடமாக தேசிய சேவை சதுக்கம் இருக்கும் என்று தற்காப்பு மூத்தத் துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் நேற்று அணிவகுப்பின்போது கூறினார்.
நாட்டின் தேசிய சேவைப் பயணத்தையும் சிங்கப்பூருக்கு தேசிய சேவையாளர்கள் ஆற்றிய பங்கையும் நினைவுகூரும் கண்காட்சி அங்கு அமைக்கப்படும் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து மரினா பே மிதக்கும் மேடை யில் தேசிய தின அணிவகுப்பு 11 முறை நடைபெற்றுள்ளது.
சிங்கப்பூரின் முதல் நாட்டுத் தலைவராக திரு யுசோஃப் இஷாக் பதவியேற்றது போன்ற முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளும் அந்த வட்டாரத்தில் நடந்துள்ளன.

