ஒருசில நாளில் புதிய அமைச்சரவை
விலைவாசி உயர்வால் சிரமப்படும் குறைந்த வருமானப் பிரிவினருக்கு நேரடியாக ரொக்க உதவி அளிக்கும் வகையில் அரசாங்க உதவித் திட்டங்களை தமது அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார்.
தேவைப்படுவோருக்கு மட்டுமே உதவி போய்ச்சேரும் வகையில் திட்டத்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய அரசாங்க அமைப்புகளுக்கு இருவார அவகாசம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன் தனியார் துறைக்கான உதவித்தொகைகளை அதிகரிப்பது குறித்து, குறிப்பாக இதுவரை உதவி பெறாத தொழில்துறைகள் பற்றி கருத்துத் தெரிவிக்குமாறும் அமைப்புகள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் சொன்னார்.
புத்ராஜெயாவில் நேற்றுக் காலை நடைபெற்ற வாழ்க்கைச் செலவின சிறப்புக்கூட்டம் மீதான தேசிய செயல் மன்றத்திற்குத் தலைமை தாங்கிய அவர், கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
"இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகைகள் ஏழைகளும் வசதியானவர்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்து உள்ளன. அதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.
"இதுபோன்ற சலுகைகள் தொடரும், அதேநேரம் அதிகம் சம்பாதிப் போருக்கு அது கிடைக்காது. ஏழை மக்களுக்கான உதவி என்று அறிவித்துவிட்டு யாரோ ஒருவர் அதனை அனுபவிப்பது சரியல்ல," என்று திரு அன்வார் விளக்கினார்.
மேலும் அவர் கூறுகையில், "உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம் குறைந்த வருமானம் ஈட்டுவோரில் பெரும்பாலானோரைச் சிரமப்படுத்துகிறது. இரு வாரத்திற்குப் பிறகு அரசாங்க அமைப்புகள் அளிக்கும் யோசனைகளை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்து பேசுவோம்," என்றார்.
முந்திய அரசாங்கம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சிறிய அளவிலான வரவுசெலவுத் திட்ட அம்சங்களை அன்வார் அரசாங்கம் பரிசீலிக்கத் தொடங்கி உள்ளது. அரசாங்கம் மீதான சுமையைக் குறைக்கும் நோக்கில் சில உதவித் திட்டங்கள் அந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை.
உதவித் திட்டங்களுக்காக இந்த ஆண்டில் மட்டும் 77.7 பில்லியன் ரிங்கிட் (S$24 பில்லியன்) செலவிட மதிப்பிடப்பட்டது.
புதிய அமைச்சரவை பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, மூன்று வெவ்வேறு கூட்டணிகளில் உள்ள கட்சிகளுடன் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஒருசில நாள்களில் அமைச்சரவை குறித்து அறிவிக்கப்படும் என்றும் திரு அன்வார் தெரிவித்தார். இதற்கு முன்னர் இருந்ததைப்போல் அல்லாமல், சிறிய அமைச்சரவையையே அமைக்க இருப்பதாக கடந்த வெள்ளிக்
கிழமை அவர் கூறியிருந்தார்.
மலேசியாவில் 2018க்குப் பிறகு மூன்று பிரதமர்கள் மாறி மாறி ஆட்சி செய்ததன் விளைவாக அங்கு நிச்சயமற்ற அரசியல் நில
வரம் நீடித்தது. அதனால், புதிய அரசாங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் நாட்டின் நிலைத்தன்மை திரும்பும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

