'அரசமைப்பு சட்டத் திருத்தம் ஆண்-பெண் திருமணம் தொடர்பான கொள்கைகளைப் பாதுகாக்கும்'

'அரசமைப்பு சட்டத் திருத்தம் ஆண்-பெண் திருமணம் தொடர்பான கொள்கைகளைப் பாதுகாக்கும்'

2 mins read
bc8f7b60-6dc3-49ed-9b08-5e2ec1d01dd6
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இன்று திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -
Google News Preferred Icon

திருமணம் என்பது ஆண்-பெண் இருபாலாருக்கு இடையே இருக்க வேண்டும், அந்த உறவு முறையில்தான் பிள்ளை பிறப்பு, வளர்ப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் சமுதாயத்தில் வலுவாக உள்ளது.

எனவே, இதுவே திருமணம் என்பதற்கு விளக்கமளித்து இது சட்ட சவால்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் வகையில் அரசமைப்பு சட்ட திருத்தம் இருக்க வேண்டும். இதன்மூலம் சமுதாயத்தில் திருமணம் பற்றிய எண்ணத்தை போற்றி பாதுகாக்கும் கொள்கைகளை கட்டிக்காக்க முடியும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இன்று திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதில் திருமணம் புரிந்த தம்பதியர்க்கு முன்னுரிமை வழங்கும் பொது வீடமைப்பு கொள்கைகள், பிள்ளைகளைத் தத்தெடுப்பது தொடர்பான கொள்கைகள், ஊடகங்களில் ஏற்புடைய தகவல்கள், பிள்ளைகளுக்கான கல்வி போதனை பற்றிய கொள்கைகள் ஆகியவை அடங்கும் என்று அவர் விளக்கினார்.

அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக 156 பிரிவு ஒன்று அறிமுகப்படுத்தப்படும். இதில் திருமண பந்தம், அதை முறைப்படுத்துவது, கட்டிக்காப்பது எவ்வாறு என்று தெளிவுபடுத்தப்படும். அத்துடன், இந்த சட்ட திருத்தம் ஆண்-பெண் இருபாலாருக்கு இடையேயான திருமண பந்தத்தை அரசு சார்பு பொதுத் துறை அமைப்புகள் பாதுகாக்க, ஆதரவளிக்க, போற்ற, ஊக்குவிக்க வழிவகுக்கும் என்றும் அமைச்சர் சொன்னார்.

ஓரினப் புணர்ச்சியை குற்றமாகக் கருதும் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377Aவை நீக்குவது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், மாதர் சாசனம் 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்டதிலிருந்து மக்கள் செயல் கட்சி அரசாங்கம் திருமண உறவு, குடும்ப உறவு முறை ஆகியவற்றை வலுவாக ஆதரிப்பதில் நிலையான கொள்கையை கொண்டிருப்பதாகக் கூறினார்.

அரசின் பல்வேறு கொள்கைகளும் திருமணம், குடும்பம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதுடன் இவற்றை மறுஉறுதிப்படுத்துவதாக உள்ளது. இதில், திருமணப் பந்தத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது, ஓரின திருமண பந்தத்துக்கு ஆதரவு மறுப்பது, திட்டமிட்ட ஒற்றைப் பெற்றோர் வாழ்க்கை முறைக்கு, அது வாடகைத் தாய் மூலமாகப் பெறப்பட்டலோ அல்லது மருத்துவ உதவி மூலம் நிகழ்ந்த குழந்தை பிறப்பாக இருந்தாலோ, எதிரான கொள்கையைக் கொண்டிருப்பதும் அடங்கும்.

இதுபோல, பாலர் பள்ளிகளிலும், பள்ளிகளிலும் திருமணம் என்றால் ஆண்-பெண் இருவருக்கும் இடையிலான ஒன்று என்றும் குடும்பம்தான் சமுதாயத்தின் அடிப்படை அங்கம் என்றும் போதிக்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், ஊடகங்களில் பாரம்பரிய முறையிலான குடும்பங்கள் அல்லாத படங்கள், காட்சிகளை வயது முதிர்ந்தோரே பார்க்க முடியும் என்பதுடன், நூலகங்களில் சிறு வயதுப் பிள்ளைகள் படிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற கதையம்சம் இருக்காது.

"ஆண்-பெண் திருமண பந்தம், அதன்வழி ஏற்படும் குடும்பங்களை ஊக்குவிப்பதே சிங்கப்பூரின் கொள்கையாக இருந்துள்ளது," என்று கூறிய அமைச்சர் மசகோஸ், "வெளிநாட்டு ஓரின திருமணத்துக்கு சிங்கப்பூரில் சட்ட அங்கீகாரம் வழங்கப்படா மாட்டாது," என்றும் கூறினார்.