பெரும்பாலான அரசு ஊழியர்
களின் சம்பள உயர்வு நாட்டின் மூலதார பணவீக்க விகிதமான 5.1 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அண்மையில் அவர்களது
சம்பளத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் கருத்தில் கொள்ளப்பட்ட பிறகு, சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.
தகுதி பெறுபவர்களின் சம்பள உயர்வு இவ்வாண்டின் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருக்கும் என்று திரு சான் கூறினார்.
இருப்பினும், மிகச் சிறிய அளவிலான அரசு ஊழியர்கள் இதற்குத் தகுதி பெறமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார். இத்தகையோரின் சம்பள உயர்வு 5.1 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்காது என்று திரு சான் கூறினார்.
"சிங்கப்பூர் குடும்பங்களுக்கு மற்ற உதவித் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. உதவி அதிகம் தேவைப்
படுவோருக்கு இவை உதவிக்கரம் நீட்டும் என்று நம்புகிறோம்," என்று திரு சான் கூறினார்.
விலைவாசி சிறப்புக் கட்டணம், கூடுதல் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை திரு சான் உதாரணம் காட்டினார்.
"கடுமையான பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சமாளிக்க இந்த ஆதரவுத் திட்டங்கள் உதவும். சிங்கப்பூர் குடும்பங்களுக்கு இவை நிவாரணம் அளிக்கும். குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவை இவை வழங்கும்," என்று திரு சான் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகளுக்கு இவ்வாண்டு இறுதியில் 1.1 மாத போனஸ் கிடைக்கும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
குறைந்த சம்பளப் பிரிவு அதிகாரிகளுக்கு கூடுதலாக ஒரு முறை போனஸ் தொகையாக $700 வழங்கப்படும். பொருளியல் நிலையைக் கருத்தில்கொண்டு போனஸ் தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆண்டு நடுப்பகுதியில் வழங்கப்பட்ட தொகையையும் சேர்த்து, இவ்வாண்டில் அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 1.45 மாத போனஸ் வழங்கப்படுகிறது. குறைந்த சம்பளப் பிரிவு அதிகாரிகளுக்குக் ஒரு முறை போனஸ் தொகையாக கூடுதலாக மொத்தம் $1,100 வரை வழங்கப்படுகிறது.

