கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க சீனா நடைமுறைப்படுத்தி உள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான
பேரணிககளுடன் வன்முறையும் வெடித்துள்ளது. தலைநகர் பெய்ஜிங்கிலும் ஷாங்காயிலும் ஆர்ப்பாட்டங்கள் நேற்று மோசமடைந்தன. சாலைகளில் மட்டுமின்றி பல்
கலைக்கழக வளாகங்களிலும் சீன அரசாங்கத்துக்கு எதிரான
அதிருப்திக் குரல்கள் வலுவடைந்தன.
கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிராக மட்டும் ஆர்ப்பாட்டக்
காரர்கள் களமிறங்கவில்லை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்றும் அதிபர் ஸி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் போர்க் கொடி ஏந்தியுள்ளனர். அதிபர் ஸி ஜின்பிங் அதிபர் பதவி ஏற்று பல ஆண்டுகளாகிவிட்டன. அவருக்கு எதிராக இப்படி ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்
காரர்களைக் கலைக்கவும் அவர்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கவும் சீன அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஷாங்காயின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கடந்த வாரயிறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது மீண்டும் நிகழாதிருக்க, அவ்விடத்தில் சீன அதிகாரிகள் தடுப்புகளை வைத்துள்ளனர். அத்துடன் சுற்றுக்காவல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சீன அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டும் சில அமைப்புகள், ஸின்ஜியாங்
மாநிலத்தின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான தீச்சம்
பவத்தை கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் தொடர்புபடுத்தி புரளி
களைப் பரப்பி இருப்பதாக சீன அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்து வரும் மிக அரிய, வெளிப்படையான எதிர்ப்பைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வந்ததை அடுத்து, அவற்றை சீனா முடக்கி வருகிறது.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டக்
காரர்களைக் கலைத்தபோது சீன அதிகாரிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக குறைகூறப்
படுகிறது. பிபிசி செய்தி நிறு
வனத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவரை சீன காவல்துறையினர் தாக்கி, தடுத்து வைத்திருப்பதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியது.
இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சு, சம்பந்தப்பட்டவர் தம்மை ஒரு செய்தியாளராக அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை என்று கூறியது. சீனாவில் இருக்கும்போது சீன சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்ளும்படி அது அனைத்துலக ஊடகங்
களைக் கேட்டுக்கொண்டது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரயிறுதியில் சீன அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து, சீனாவில் கொவிட்-19 கிருமி பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று முன்தின நிலவரப்படி பெய்ஜிங்கில் மேலும் 3,860 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

