சிங்கப்பூரில் மேலும் இரண்டு வேலையிட மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. ஜூரோங் தீவு அருகே வேலை பார்த்துக்கொண்டுஇருந்த இந்தியாவைச் சேர்ந்த 41 வயது ஊழியர் ஒருவர் கடலில் விழுந்துவிட்டார்.
துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்த 69 வயது சிங்கப்பூரர் கீழே விழுந்து மாண்டுவிட்டார்.
இந்த இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்த நாள்களில் நிகழ்ந்து இருப்பதாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
மெர்லிமாவ் ரோட்டில் 'சிங்கப்பூர் ரிஃபைனிங் கம்பெனி' என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஆடவர், நவம்பர் 25ஆம் தேதி முற்பகல் சுமார் 11 மணிக்கு ஜூரோங் தீவு அருகே கடலில் விழுந்துவிட்டார்.
அதே நாளன்று அவருடைய உடல் மீட்கப்பட்டது. அந்த ஊழியரின் முதலாளியான 'பிளான்ட் ஜெனரல் சர்வீசஸ்' என்ற நிறுவனத்திற்கு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இடம்பெறும் தொங்கு சாரப் பணிகளை நிறுத்தும்படி அமைச்சு உத்தரவிட்டது. சம்பவம் பற்றி அது புலன்விசாரணை நடத்துகிறது.
கேர்ன்ஹில் சர்க்கிளில் உள்ள 'ஹில்டாப்ஸ்' கூட்டுரிமை அடுக்குமாடி புளோக்கில் இருக்கும் ஒரு காலியான வீட்டில் துப்புரவு வேலையில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூரர், மேலிருந்து கீழே விழுந்தார்.இச்சம்பவம் நவம்பர் 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ந்தது.
அவர் அந்த வீட்டின் வெளிப்புற சன்னல் கதவுகளைத் துடைத்துக் கொண்டிருந்தபோது தரையில் இருந்து சுமார் 9 மீட்டர் உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.
'ஹோம் கிளின்ஸ் கிளினிங் அண்ட் லாண்டரி சர்வீசஸ்' என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அந்த ஊழியர், சம்பவம் நிகழ்ந்தபோது பாதுகாப்புச் சாதனம் எதையும் அணிந்திருக்கவில்லை.
இந்தச் சம்பவம் பற்றி புலன்விசாரணை நடத்தி வரும் அமைச்சு, உயரமான இடங்களில் நடக்கும் வேலைகளை நிறுத்தும்படி அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
இந்த ஆண்டில் இதுவரையில் வேலையிட விபத்துகளில் 42 பேர் மாண்டு இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நான்காண்டுகளில் இல்லாத அளவாக இருக்கிறது.
வேலையிட விபத்துச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ஆறுமாத பாதுகாப்பு கால ஏற்பாட்டை அமைச்சு நடைமுறைப்படுத்தியது.
அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் தவறு செய்யும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்க முடியாது.

