இந்தியாவின் விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
அப்படி இணைக்கப்பட்டு உருவாகும் பெரிய நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு (எஸ்ஐஏ) 25.1% பங்கு இருக்கும். இது ரூ.20,585 பில்லியன் (S$360 மில்லியன்) கூடுதல் முதலீட்டுடன் சாத்தியமாகும்.
அந்த இணைப்புக்குப் பிறகு ஏர் இந்தியாவில் டாடா குழுமம்தான் 74.9% பங்குடன் ஆகப் பெரிய பங்கு நிறுவனமாக இருக்கும். இது S$1.07 பில்லியனுக்குச் சமமான முதலீட்டு மூலம் சாத்தியமாகும்.
விஸ்தாரா நிறுவனத்தில் டாடா குழுமம் இப்போது 51% பங்கைக் கொண்டுள்ளது. அதில் எஸ்ஐஏ நிறுவனத்திற்கு 49% பாத்தியதை இருக்கிறது.
புதிய ஏர் இந்தியா குழுமத்தில் சிங்கப்பூரின் மூலதனம் மேலும் ரூ.50.2 பில்லியன் (S$880 மில்லியன்) அதிகரிக்கக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. ஏர் இந்தியா குழுமம் சீரமைப்பிற்காகவும் விரிவடைவதற்காகவும் தனது பங்குதாரர்களிடம் இருந்து கூடுதல் நிதியைத் திரட்டும் பட்சத்தில் இந்த அதிகரிப்பு இடம்பெறக்கூடும்.
விஸ்தாரா-ஏர் இந்தியா இணைப்பு 2024 மார்ச் மாதம் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகே இந்தக் கூடுதல் முதலீடு இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.
எஸ்ஐஏ நிறுவனமும் டாடாவும் 2013ல் சுமார் S$100 மில்லியன் முதலீடு செய்து விஸ்தாரா நிறுவனத்தை உருவாக்கின.
இருந்தாலும் காலவோட்டத்தில் விஸ்தாராவில் எஸ்ஐஏ நிறுவனத்தின் முதலீடு சுமார் S$900 மில்லியனாகக் கூடி இருக்கிறது என்பது இந்த நிறுவனத்தின் சொந்த வருடாந்திர அறிக்கைகளின் மூலம் தெரிகிறது.
டாடா நிறுவனம் தன்னுடைய விமான நிறுவனங்கள் அனைத்தையும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் கீழ் இணைக்கும் என்பது நேற்று வெளியான அறிவிப்புகள் மூலம் உறுதியானது.
இதையடுத்து டாடா-சிங்கப்பூர் பங்காளித்துவ உறவு, இந்தியாவின் ஆகப் பெரிய விமானக் குழுமங்களில் ஒன்றாகத் திகழும். அதற்கு சந்தையில் 23% பங்கு இருக்கும்.
அந்த இணைப்பு இந்தியாவில் தனது ஈடுபாட்டை பலப்படுத்தும் என்றும் தனது பல பயண மைய உத்தியை வலுவாக்கும் என்றும் எஸ்ஐஏ தெரிவித்து உள்ளது.