நொடித்துப்போன மின்னிலக்க நாணயப் பரிமாற்ற நிலையமான எஃப்டிஎக்ஸில் தெமாசெக் செய்திருந்த US$275 மில்லியன் (S$377 மில்லியன்) முதலீட்டு இழப்பு, அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்திற்கான நிதிக் கையிருப்பின் வருவாயையோ நிகர முதலீட்டு வருவாய் பங்களிப்பையோ (என்ஐஆர்சி) பாதிக்காது.
காரணம், என்ஐஆர்சி என்பது சிங்கப்பூரின் ஒட்டுமொத்த முதலீட்டு நிறுவனங்களின் நீண்டகால வருவாயுடன் தொடர்புடையது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேநேரம், எஃப்டிஎக்ஸ் சரிந்ததன் தாக்கம் சிங்கப்பூரின் விரிவான நிதிக் கட்டமைப்பிலும் பொருளியலிலும் சொற்ப அளவிலேயே பிரதிபலித்தாகவும் கேள்வி களுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.
"எஃப்டிஎக்ஸில் தெமாசெக் செய்திருந்த முதலீட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ஏமாற்றத்தைத் தருகிறது. வாடிக்கையாளர் நிதியைத் தவறாகக் கையாண்டதன் மூலம் மோசடிக்கு வழிவகுக்கக்கூடிய வகையில் அந்த மின்னிலக்க நாணயப் பரிமாற்ற நிலையத்தை நிர்வாகம் செய்ததன் மூலம் இழப்பு ஏற்பட்டது," என்றார் நிதி அமைச்சருமான திரு வோங்.
"நம்மைப்போலவே உலகளவிலான முதலீட்டு நிறுவனங்களான பிளாக்ராக், செக்கோயா கேப்பிட்டல் போன்றவையும் அதில் முதலீடு செய்திருந்தன. இழப்பில் அவையும் தப்பவில்லை.
"எஃப்டிஎக்ஸ் சிங்கப்பூரில் செயல்படவில்லை என்பதால் சிங்கப்பூரைச் சேர்ந்த எத்தனை பேரில் அதில் முதலீடு செய்திருந்தனர் என்ற விவரம் கிடைக்கவில்லை.
"முதலீடு என்பதில் அபாயம் இருப்பது இயல்பு. முறையான கண்காணிப்பை மேற்கொண்டாலும் அபாயத்திலிருந்து தப்பிவிட முடியாது. இருப்பினும் நமது முதலீட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றியிலும் பாடம் கற்றுக்கொள்கின்றன என்பதே இதில் முக்கியமான அம்சம்.
"அதன்மூலம் நீண்ட காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய முதலீடுகளை மேற்கொள்ளவும் அத்தகைய முதலீடுகளில் உள்ள அபாயங்களைச் சரிவர கணிக்கவும் முடிகிறது," என்று திரு வோங் விளக்கினார்.
"இப்படிச் செய்வதன் மூலம் நமது தேசிய சேமிப்பில் தொடர்ந்து நிதியைச் சேர்க்க முடியும். அத்துடன் வருங்கால அரசாங்கத் திட்டங்களுக்கான நிதிக்கு நிலையான வருவாயைப் பெற்றுத் தரமுடியும். எஃப்டிஎக்ஸ் முதலீட்டைக் கழித்துவிட்டுக் கணக்கிட்டால், இவ்வாண்டு மார்ச் மாத நில
வரப்படி, தெமாசெக்கின் உள் வருவாய் விகிதம் கடந்த பத்தாண்டுகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். நிதித்துறையின் சராசரி வருவாயைக் காட்டிலும் சிறப்பானது அது. எஃப்டிஎக்ஸுக்கு ஏற்பட்ட நிலைமை சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனத்திற்கு நிதி இழப்பை மட்டுமல்ல அதன் நற்பெயரிலும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் முதலீடு செய்தது பற்றிய உள் மறுஆய்வை சுயேச்சைக் குழு ஒன்றின் மூலம் தெமாசெக் தொடங்கி உள்ளது. முதலீட்டுக்கும் அந்தக் குழுவுக்கும் தொடர்பில்லை. மறுஆய்வின் முடிவுகளை தெமாசெக் சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் தெரி விக்கும்," என்றார் திரு வோங்.
எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிற்குப் பதிலளித்த அவர், "தெமாசெக்கிற்குள் மேற்கொள்ளப்படும் மறுஆய்வு என்பது வழக்க மான நடைமுறைதான். தெமாசெக்கின் செயல்முறைகளை மேம்படுத்துவதோடு வருங்கால முதலீட்டுக்கான பாடங்களைக் கற்றுக்கொள்ள இந்த மறுஆய்வு உதவும்," என்றார்.
'எஃப்டிஎக்ஸ்' சரிவின் தாக்கம் பற்றி துணைப் பிரதமர் வோங் விளக்கம்

