மின் வாகனங்களுக்கான பதிவு அதிகரித்து வரும் நிலையில் அதுதொடர்பான சட்டம் ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய இலகுரக வாகனப் பதிவுகளில் 10 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை மின் வாகனங்கள்.
2020ஆம் ஆண்டு இந்த விகிதம் 0.3 விழுக்காடாக இருந்தது. பதிவாகும் மின் வாகனங்களில் பாதி கொண்டோமினியக் குடியிருப்பாளர்களுக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் குடியிருப்பாளர்களுக்கும் உரியவை என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்வாகன மின்னூட்ட மசோதாவைத் தாக்கல் செய்து அவர் பேசினார்.
2050ஆம் ஆண்டு வாக்கில் கரிமம் இல்லாத நாடாக சிங்கப்பூரை மாற்ற நிலப் போக்குவரத்துத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றார் அவர். இங்கு வெளியேற்றப்படும் கரிம அளவில் 15 விழுக்காடு நிலப் போக்கு
வரத்துத் துறை சம்பந்தப்பட்டது என்றும் திரு ஈஸ்வரன் கூறினார்.
புதிய சட்டம் மூன்று நோக்கங்களைக் கொண்டு இருக்கும்.
மின்வாகனங்களுக்கான மின்னூட்டத்தை பாதுகாப்புக்குரிய வகையில் ஒழுங்குபடுத்துவது, மின் வாகன மின்னூட்டக் கட்டமைப்பு மற்றும் அதன் சேவைகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வது, சிங்கப்பூரின் மின்வாகன மின்னூட்டக் கட்டமைப்பை எளிதில் பெற ஊக்குவிப்பது ஆகியன அந்த மூன்று நோக்கங்கள்.
போதுமான அளவு மின்னூட்ட முகப்புகள் இருப்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை புதிய சட்டம் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் வழங்கும். அதன்படி, இங்குள்ள எல்லா மின்னூட்ட முகப்பு களும் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்ய இந்தப் பதிவு அவசியம். மின்னூட்ட விநியோகம், விளம்பரம், நிறுவுதல், பதிவு செய்தல், நிர்வகித்தல், மின்னூட்டக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்றவை பாதுகாப்பு அம்சங்களுள் அடங்கும் என்றார் திரு ஈஸ்வரன்.
மின்னூட்ட சேவை வழங்கும் நிறுவனங்கள் அதற்குரிய உரிமம் பெற சட்டம் வலியுறுத்துகிறது. எல்லாக் கட்டடங்களும் குறைந்தபட்ச மின்னூட்ட முகப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். கொண்டோமினியக் கட்டடங்களில் மின்னூட்ட வசதியை நிறுவ அங்கு வசிப்போரில் பாதிப்பேரின் அனுமதி தேவை. பாதுகாப்புக் கருதி சில விதிமுறைகள் அமல்படுத்தப்படும். உதாரணத்திற்கு, அகற்றப்
படக்கூடிய மின்னேற்றிகளுக்கு மின்னூட்டுதலை குடியிருப்புகளில் மேற்கொள்ளக்கூடாது. தீப்பற்றக்கூடிய அபாயம் இருப்பதால் அவ்வாறு செய்ய அனுமதி இல்லை என்றார் அமைச்சர்.

