மலேசியாவின் புதிய அமைச்
சரவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இன்று டிசம்பர் 1ஆம் தேதி அமைச்சரவை அறிவிக்கப்படக்கூடும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.
பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று பிற்பகலில் தமது எல்லா அலுவல் பணிகளையும் ஒத்தி வைத்துவிட்டு அமைச்சரவை தொடர்பான வேலைகளில் முழுக் கவனம் செலுத்தியதாக 'த ஸ்டார்' இணையச் செய்தி தெரிவித்தது.
"அமைச்சரவை 25 அமைச்சர் களை உள்ளடக்கியதாக சுருக்கப்படலாம். இதுவரை இல்லாத வகையில் சிறிய அமைச்சரவையை அமைப்பதே அன்வாரின் நோக்கமாக உள்ளது. 25க்கும் கீழ் குறைக்கலாமா என்பது குறித்து அவர் ஆலோசித்து வருகிறார்," என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக 'த ஸ்டார்' கூறியது.
அமைச்சரவையை உருவாக்கு வதில் பல்வேறு அரசியல் அம்சங்களை அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது என்றும் அச்செய்தி குறிப்பிட்டது.
முன்னதாக, முகைதீன் யாசின் அரசாங்கத்தில் 32 அமைச்சர்களும், அவருக்குப் பின் வந்த இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அரசாங்கத்தில் 31 அமைச்சர்களும் இடம்பெற்று இருந்தனர்.
இரண்டு துணைப் பிரதமர்கள் இடம்பெறக்கூடும் என்றும் அவர்களில் ஒருவர் அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிதி என்றும் மற்றொருவர் ஜிபிஎஸ் கட்சியின் ஃபடில்லா யூசோஃப்பாக இருக்கலாம் என்றும் ஊகத் தகவல்கள் கசிந்துள்ளன.
நிதி அமைச்சை தன்வசம் வைத்துக்கொள்ளவே அன்வாரின் கட்சி விரும்புகிறது. அதே சமயம் இரண்டாம் நிதி அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டால் அது அம்னோவுக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மற்றொரு முக்கிய பதவி உள்துறை அமைச்சு. இதனைப் பெற அன்வார் கட்சி யும் அம்னோவும் விரும்புகின்றன.
பிரதமர் அன்வார் நேற்று முன்தினம் மாமன்னரைச் சந்தித்தாகவும் அமைச்சரவைப் பட்டியலை அப்போது அவர் மாமன்னரிடம் வழங்கியதாகவும் தெரிகிறது.
கூடிய விரைவில் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்படலாம் என்று பிகேஆர் கட்சியின் தகவல் தொடர்பாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார். இருப்பினும் மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.

