வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இந்திய ஊழியர்கள் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆக அதிகமான தொகையைத் தாயகத்திற்கு அனுப்பி வருவதாக உலக வங்கி தெரிவித்து இருக்கிறது.
இதனால் இந்தியாவிற்கான இந்த ஆண்டின் பணப் பரிவர்த்தனை விகிதம் 12 விழுக்காடு அதிகரித்து 100 பில்லியன் டாலரை (136 பில்லியன் வெள்ளி) எட்டக்கூடும். அத்துடன் உலகில் ஆக அதிகப் பரிவர்த்தனைத் தொகையைப் பெறும் நாடு என்ற சிறப்பை அது தக்கவைத்துக்கொள்ளும்.
மெக்சிகோ, சீனா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டில் வேலைபார்க்கும் குடிமக்கள் தாயகத்துக்குப் பணம் அனுப்பும் விகிதத்தில் இந்தியா மிகத் தெளிவாக முன்னிலை வகிக்கிறது.
சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் வசிக்கும் இந்தியத் திறனாளர்கள் இந்த ஆண்டு கூடுதலான தொகையைத் தாயகத்திற்கு அனுப்புவதாக உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலப்போக்கில் வளைகுடா நாடுகள் போன்றவற்றில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களாக வேலைபார்ப்பதைக் கைவிட்டு, திறனாளர்களாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதில் இந்தியர்கள் முனைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் அவர்கள் பெறும் அதிகமான ஊதியம், கூடுதல் வேலைவாய்ப்பு, வலுவிழந்துள்ள இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற அம்சங்களும் இவ்வாறு அனுப்பப்படும் தொகை உயர்ந்திருப்பதற்குக் காரணம்.
நாணய மதிப்பு வலுவிழந்ததால் சென்ற ஆண்டில் அந்நியச் செலாவணி தொடர்பில் ஏறக்குறைய 100 பில்லியன் டாலர் நட்டத்தைச் சந்தித்த இந்தியாவிற்கு இந்தத் தொகை பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காட்டுக்கு ஈடான இந்தத் தொகை, நிதித் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதில் முக்கியத்துவம் வகிப்பதாகக் கூறப்படுகிறது.
2016-17ஆம் ஆண்டுகளில் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட தொகை 26 விழுக்காடு. ஒப்புநோக்க, 2020-21ல் அது 36 விழுக்காடு ஆனது. அதே காலகட்டத்தில் வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் போன்றவற்றில் இருந்து அனுப்பப்பட்ட தொகை 54 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாகக் குறைந்தது. இந்திய மத்திய வங்கித் தகவல்களை மேற்கோள்காட்டி உலக வங்கி இவ்வாறு தெரிவித்தது.
இந்நிலையில், பங்ளாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அவரவர் தாயகத்திற்கு அனுப்பும் தொகை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி கூறியது.