அடுத்த ஐந்து முதல் பத்தாண்டுகளுக்குள் நல வாழ்வுத் துறையைப் பயணத்துறையில் முக்கிய அம்சமாக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் தெற்குக் கரையோரத்தில் நல மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் ஆர்வமுள்ள மேம்பாட்டு நிறுவனங்களின் யோசனைகளை வரவேற்கும் வகையிலான ஆர்வம் தெரிவிக்கும் நடவடிக்கையை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கியது.
நல மையம் எங்கு கட்டப்படும் என்று பயணத்துறைக் கழகம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
ஆனால் வருங்காலத்தில் கட்டப்படவுள்ள மரினா சவுத் வட்டாரத்தையும் அருகில் உள்ள கரையோரப் பூங்காக்கள், மரினா நீரிணை ஆகியவற்றையும் முழுமையாக்க புதிய மையம் உதவும் என்று கழகத்தின் விளையாட்டு, உடல்நலத்துறை நிர்வாக இயக்குநர் ஓங் லிங் லீ கூறினார்.
நலம் சார்ந்து பயணம் மேற்கொள்வோர் இங்கு வரவும் அவர்கள் கூடுதல் நாள்கள் தங்கவும் ஊக்குவிப்பதன்வழி அத்திட்டம் சிங்கப்பூரின் பயணத்துறைக்கும் பொருளியலுக்கும் பங்களிக்கும் என்றார் திருவாட்டி ஓங்.
கடந்த ஜூன் மாதம் முதன்முறையான நடத்தப்பட்ட சிங்கப்பூர் நல விழாவில், வரும் ஆண்டுகளில் நாட்டின் சுற்றுலா அம்சங்களில் நலத்துறை முக்கிய அம்சமாக மாறும் என்று பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் லிம் கூறியிருந்தார். உள்ளூரில் நலத்துறைக்கான தேவையை வளர்த்து அதற்கேற்ப கழகம் திட்டமிட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் உடல்நலம், மனநலம் ஆகியவை மிக முக்கியம் என்று உணர்த்தியுள்ளதாகவும் திருவாட்டி ஓங் கூறினார்.
அதிகமான பயணிகள் இத்தகைய நலம் சார்ந்த பயணங்களுக்கு முன்னுரிமை தருகின்றனர். இவ்வேளையில் புதிய நல மையம் சிங்கப்பூரை 'நகர நலச் சரணாலயமாக' உருவாக்கும் பயணத்துறைக் கழகத்தின் குறிக்கோளுக்குப் பங்களிக்கும் என்றார் அவர்.
கிருமிப்பரவலால் நடப்பில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு பயணிகளின் வரவு அதிகரித்து வரும் நிலையில் பயணத்துறைக் கழகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
பயண வசதி, தொழில்நுட்பம், வலுவான வர்த்தக மையம் எனும் நற்பெயர் ஆகியவை சிங்கப்பூரின் பலம். அவற்றைப் பயன்படுத்தி நலம் சார்ந்த பயணத்துறை அம்சங்கள் உருவாக்கப்படும் என்றார் திருவாட்டி ஓங்.
இப்போதைக்கு தொழிலுக்காகவும் வேறு காரணங்களுக்காக வருவோருக்கு சிங்கப்பூரில் நலம் சார்ந்த சேவைகளை வழங்க திட்டமுள்ளதாக அவர் கூறினார்.

