காற்பந்துச் சூதாட்டம் நான்கு இலக்கம், டோட்டோ குலுக்கல் பரிசு போன்ற லாட்டரியில் சூதாடியவர்கள் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் மொத்தம் $9.2 பில்லியனைச் செலவிட்டுள்ளனர்.
இது அதற்கு முந்திய நிதி ஆண்டில் செலவு செய்யப்பட்ட தொகையைவிட 40% அதிகம்.
2021ஆம் நிதி ஆண்டில் $6.6 பில்லியன் செலவிடப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய விளையாட்டுகளில் செலவிடப்பட்ட ஆகப் பெரிய தொகையும் இதுதான். சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இவ்விவ ரங்கள் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த தொடங்கியது முதல் லாட்டரி விளையாட்டுகளில் சூதாட்டம் அதிகரித்ததாக பந்தயப்பிடிப்பு வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.
கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடப்பில் இருந்தன. அப்போது அனைத்து சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகளும் சிங்கப்பூர் டர்ஃப் கிளப், இரண்டு சூதாட்டக் கூடங்கள் ஆகியவையும் மூடப்பட்டிருந்தன. ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு வெவ்வேறு தேதிகளில் அவை மீண்டும் செயல்படத் தொடங்கின.
சிங்கப்பூர் பந்தயப்பிடிப்பு வாரியம் அரசாங்க ஆணை பெற்ற கழகமாகும். குலுக்கல் பரிசுகளை நடத்தும் சிங்கப்பூர் பூல்ஸ், குதிரைப் பந்தயங்களை நடத்தும் சிங்கப்பூர் டர்ஃப் கிளப் ஆகியவற்றை அது நடத்துகிறது.
பல்வேறு காரணங்களால் சூதாட்டம் கடந்த நிதி ஆண்டில் பெருமளவு அதிகரித்திருக்கலாம் என்று ஆலோசகர்கள் கூறினர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் பல நாடுகளில் அகற்றப்பட்டுள்ளன. அதனால் கடந்த நிதி ஆண்டில் சூதாடுவோர் பணம் போட்டு சூதாட கூடுதலான காற்பந்து விளையாட்டுகள் நடைபெற்றிருக்கலாம் என்று வீ கேர் சமூக சேவைகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தாம் யுவென் ஹான் கூறினார்.
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது சில முதியவர்கள் சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்தில் சூதாடக் கற்றுக்கொண்டதைத் தமது நிலையம் பார்த்ததாக அராய்ஸ் 2கேர் சமூக சேவைகள் அமைப்பின் நிலைய மேலாளர் கூறினார்.
சூதாட்டப் பிரச்சினை தொடர்பான தேசிய மன்றத்தின் 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் பங்கேற்ற 18 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளில் 44% பேர் குறைந்தது ஒரு சூதாட்ட நடவடிக்கையில் பந்தயம் கட்டுவதாகக் கூறினர். 2020 கணக்கெடுப்பில் 4-D மிகவும் பிரபலமானதாக அறியப்பட்டது. அதற்கு அடுத்து டோட்டோ இருந்தது.
உலகக் கிண்ணப் போட்டிகள் டிசம்பர் 18ஆம் தேதி முடிவடைந்த பிறகு, சூதாட்டக்காரர்கள் கடன்கள், சூதாட்டப் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி நாடுவது அதிகரிக்கும் என்று ஆலோசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் குதிரைப் பந்தயங்களில் $818 மில்லியன் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூர் டர்ஃப் கிளப் தொற்றுநோய் முடக்கநிலையில் மூடப்பட்டிருந்ததற்கு முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட $496 மில்லியனைவிட 65% அதிகம்.