தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சுறுசுறுப்பாக விளையாடிய ஸ்பெயினைத் தன்னம்பிக்கையால் சாய்த்து வரலாறு படைத்தது மொரோக்கோ. நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பெனால்டிகளின் மூலம் 3-0 எனும் கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை பெனால்டிகளின் மூலம் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. பல இளம் வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் தான் எடுத்த எல்லா பெனால்டிகளையும் கோலாக்கத் தவறியது.
ஆட்டம் சென்ற விதம் ஸ்பெயினுக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்ற உணர்வைத் தந்தது. ஆனால் மொரோக்கோவின் விடாமுயற்சிக்குக் கிடைத்தது வெகுமானம்.
காலிறுதிச் சுற்றில் மொரோக்கோவும் போர்ச்சுகலும் சந்திக்கும். சுவிட்சர்லாந்துக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 6-1 எனும் கோல் கணக்கில் அமோக வெற்றி கண்டது போர்ச்சுகல். போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து விளையாடவில்லை.