இந்தியாவில் கடந்த 2014ஆம் ஆண்டு 74 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 140ஆக உயர்ந்துள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 220ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் நேற்று மோப்பா அனைத்துலக விமான நிலையத்தைத் திறந்துவைத்தார்.
இணைப்பை வலுப்படுத்த திரு மோடி பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதற்கேற்ப பல்வேறு விமான நிலையங்களை அவர் திறந்துவைத்தும் பல விமான நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். கடந்த மாதம் அருணாசலப் பிரதேச மாநிலத் தலைநகர் இட்டா நகரில் டோன்யி போலோ விமான நிலையத்தையும் ஜூலை மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தியோகார் விமான நிலையத்தையும் அவர் திறந்துவைத்தார்.
சென்ற ஆண்டு நவம்பரில் நொய்டா அனைத்துலக விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய திரு மோடி, அதற்கு முந்திய மாதத்தில் புகழ்பெற்ற பௌத்தத் தலமான குஷிநகரில் ஓர் அனைத்துலக விமான நிலையத்தைத் திறந்துவைத்தார்.
நேற்று திறப்புவிழா கண்ட மோப்பா அனைத்துலக விமான நிலையம், சிறுமாநிலமான கோவாவில் அமைந்துள்ள இரண்டாவது விமான நிலையம். கடந்த 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அதனைக் கட்டி முடிக்க ரூ.2,870 கோடி செலவிடப்பட்டதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இந்த விமான நிலையத்தால் ஆண்டுக்கு 4.4 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும்.
நீடித்து நிலைக்கத்தக்க உள்கட்டமைப்பு என்ற கருப்பொருளின் அடிப்படையில் அவ்விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி ஆலை, பசுமைக் கட்டடங்கள், ஓடுபாதையில் எல்இடி விளக்குகள், மழைநீர் சேமிப்பு, மறுசுழற்சி வசதியுடன் கூடிய அதிநவீன கழிவுநீர்ச் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட வசதிகள் அங்கு இடம்பெற்றுள்ளன.

