எதிரி நாடுகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் ஆற்றல்மிக்க புதிய தலைமுறை ஆயுதங்களைப் பெருக்குவதை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ளது என்று அதன் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார்.
"புதிய வகை ஆயுதங்கள் உட்பட அழிவை ஏற்படுத்துவதில் ஆற்றல்மிக்க ஆயுதங்களின் தயாரிப்பைப் பெருக்கி வருகிறோம்," என்று டெலிகிராம் சமூக ஊடகம் வழியாக திரு மெட்வடேவ் கூறி இருக்கிறார்.
உக்ரேனில் மட்டுமன்றி, ஐரோப்பா, வடஅமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பல பகுதிகளிலும் தங்கள் எதிரிகள் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இப்போது ரஷ்யப் பாதுகாப்பு மன்றத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வரும் அவர், எவ்வகை ஆயுதப் பெருக்கத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவில்லை.
ஒலியின் வேகத்தைவிடப் பலமடங்கு வேகத்தில் செல்லக்கூடிய 'ஹைப்பர்சோனிக்' ஆயுதங்கள் உள்ளிட்ட புதுவகை ஆயுதங்களைத் தாங்கள் உருவாக்கி வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இதற்குமுன் பலமுறை கூறி உள்ளார்.
ரஷ்ய ஏவுகணைகளும் 'ஹைப்பர்சோனிக்' ஆயுதங்களும் அதிநவீனமானவை என்றும் அமெரிக்காவிடம் இருப்பதைவிட ஆற்றல்மிக்கவை என்றும் அதிபர் புட்டின் குறிப்பிட்டிருந்தார்.
கடும் சண்டை
இதனிடையே, தெற்கு உக்ரேனில் இருதரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
ஒடெசாமீது ரஷ்யா ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. அதேவேளையில், ரஷ்யா வசமிருக்கும் மெலிட்டோபோல் நகரை மீட்கும் முயற்சியில் உக்ரேன் இறங்கியுள்ளது.
ரஷ்யாவின் பத்து ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் ராணுவம் கூறியது. ஆயினும், மேலும் ஐந்து ஆளில்லா வானூர்திகள் எரிசக்தி நிலையங்களைத் தாக்கியதால் கிட்டத்தட்ட ஒன்றரை மில்லியன் மக்களுக்கு மின்விநியோகம் தடைபட்டுள்ளது.
துறைமுக நகரமான ஒடெசாமீது தாக்குதல் நடத்த ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்திகளை ரஷ்யா பயன்படுத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
"ஒடெசாவில் நிலைமை மிகக் கடினமானதாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ரஷ்யத் தாக்குதலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், மின்விநியோகத்தைச் சீரமைக்க சில நாள்கள் ஆகலாம்," என்று உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நேற்று முன்தினம் காணொளி உரை மூலமாகக் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் தொடுத்து வருகிறது.
இதற்கிடையே, மெலிட்டோபோலில் உக்ரேன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் மாண்டுவிட்டதாகவும் பத்துப் பேர் காயமுற்றதாகவும் ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

