மலேசியாவில் கனமழை பெய்து வருவதால் அந்நாட்டில் காய்கறி விளைச்சலும் மீன்பிடித் துறையும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாட்டில் காய்கறிகள், கடல்உணவு வகைகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது இவற்றின் விலை மேலும் அதி
கரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழைக்காலம் காரணமாக கனமழை பெய்து அறுவடை வெகுவாகக் குறைந்திருப்பதாக மலேசிய காய்கறி விவசாயிகள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் லிம் செர் குவீ கூறினார்.
"அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்தால் சீனப் புத்தாண்டின்போது காய்கறிகளின் விலை நிச்சயம் அதிகரிக்கும்.
"கனமழை பெய்யும்போது அறுவடை பாதிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுகிறது.
"அதுமட்டுமல்லாது, சிங்கப்
பூரில் பள்ளி விடுமுறை தொடங்கி விட்டதை அடுத்து, அங்கிருந்து பலர் மலேசியாவுக்கு வந்து காய்
கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் மலேசியாவில் காய்கறிகள் குறைந்துவிட்டன," என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில் மலேசியாவில் காய்கறிகளின் விலை 10 காசு முதல் 20 காசு வரை அதிகரித்
திருப்பதாகவும் வெள்ளம் ஏற்பட்டால் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கோலாலம்பூர் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வோங் கெங் ஃபாட் கூறினார்.
"காய்கறிகளின் விலை இவ்வாரம் ஏற்றம் கண்டுள்ளது. விலை மேலும் அதிகரிக்கும். கனமழை தொடர்ந்தால் அடுத்தடுத்த வாரங்களில் காய்கறிகளின் விலை ஏற்றம் காணும்.
"அத்துடன் வெள்ளம் ஏற்பட்டால் காய்கறிகள் விளைச்சலும் விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்படும். அவ்வாறு நேர்ந்தால் சீனப் புத்தாண்டின்போது அவற்றின் விலை அதிகரிக்கும்," என்றார் திரு வோங்.
காய்கறிகளின் மொத்த வியாபார விலை அதிகரித்திருப்பதை திரு வோங் சுட்டினார். கடுகுக் கீரையின் விலை மூன்று ரிங்கிட்டிலிருந்து 5.50 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"இவை வெறும் மொத்த வியாபார விலைகள். சில்லறை வியாபார விலைகள் இதைவிட அதிகமாக இருக்கும்," என்று திரு வோங் தெரிவித்தார்.
இதற்கிடையே, மோசமான வானிலை, கொவிட்-19 நெருக்கடி நிலைக்குப் பிறகு அதிகரித்திருக்கும் தேவை ஆகியவை காரணமாக மீன்களின் விலையும் அதி
கரித்திருப்பதாக கடல்உணவு விநியோக நிறுவனமான நார்த் ஓஷன் ஹோல்டிங்ஸின் இயக்குநர் கேன்டிஸ் கோ தெரிவித்தார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் பெரும் அளவிலான ஒன்றுகூடல்கள் மீண்டும் களைகட்டியதால் கடல்உணவு வகைகளுக்கான தேவை அதி
கரித்து அவற்றின் விலை ஏற்றம் கண்டதாக அவர் கூறினார்.
சீனப் புத்தாண்டின்போது கடல்உணவு வகைகளின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக வானிலைப் போக்கு மாறி வருவதால் மீன்பிடித் துறை வெகுவாகப் பாதிப்படைந்திருப்பதாக திருவாட்டி கோ கூறினார். முன்புபோல அதிக மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை என்றார் அவர்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கடலிலிருந்து கடல்
உணவு வகைகள் நிறைய கிடைக்கும். ஆனால் தற்போது தொடர்ந்து கனமழை பெய்கிறது. பலத்த காற்று காரணமாக கடலுக்குச் சென்று மீன் பிடிக்க முடியவில்லை. வழக்கமாக இக்கடற்பகுதியில் இருக்கும் மீன்களும் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டன.
"அதுமட்டுமல்லாது, மீன்பிடித் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்துவதும் சிரமமாகிவிட்டது. அவர்களில் பலர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள். மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு குறைந்திருப்பதால் அவர்களை வேலைக்கு எடுக்க அதிகம் செலவாகிறது," என்றார் திருவாட்டி கோ.

