சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் இரண்டாம், மூன்றாம் நீர்மூழ்கிக் கப்பல்களுடைய செயல்பாட்டின் அதிகாரபூர்வ அறிமுக விழா ஜெர்மனியின் கீல் துறைமுக நகரில் நேற்று இடம்பெற்றது. 'இம்பெக்கபல்', 'இலஸ்டிரியஸ்' என்ற பெயர்களைக் கொண்ட இவ்விரு நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாட்டை 'திஸ்ஸன்கிருப் மரீன் சிஸ்டம்ஸ்' கப்பல் பட்டறையில் திருமதி லீ சியன் லூங் தொடங்கிவைத்தார்.
"1960களில் தனது முதல் நீர்மூழ்கிக் கப்பலான புதுப்பிக்கப்பட்ட ஸ்வீடிஷ் கப்பலுக்குப் பிறகு, தற்போது இந்தக் கப்பல்களை சிங்கப்பூர் குடியரசு கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் பிரதமர் லீ.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஜெர்மானிய அதிபர் ஒலாஃப் ஷோல்ஸ், ஜெர்மனியின் கடற்படை தலைவர் வைஸ்-அட்மிரல் ஜென் கிறிஸ்டியன் கேக், சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் எரன் பெங், டிகெஎம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஒலிவர் பர்க்ஹார்ட், தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் தலைமை நிர்வாகி மெர்வின் டானுடன், இரு நாடுகளைச் சேர்ந்த மூத்த தற்காப்பு அதிகாரிகளும் இந்த நிகழ்விற்கு வந்திருந்தனர்.
வெல்ல முடியாத வகை (இன்வின்சிபல்) நீர்மூழ்கிக் கப்பல்கள் சிங்கப்பூரின் ஆழமற்ற, பரபரப்பான வெப்பமண்டல நீரில் செயல்படுவதற்கு சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றால் நீண்ட நேரத்திற்கும் தூரத்திற்கும் செயல்பட முடியும், அதிக பாரத்தை ஏந்திச் செல்லமுடியும். சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கு முன்னதாக அவை கடல் சோதனைகளில் ஈடுபடுத்தப்படும்.
சிங்கப்பூரும் ஜெர்மனியும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட பங்காளித்துவ நாடுகள் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, இரு நாடுகளும் பல விஷயங்களில் நல்ல புரிந்துணர்வு கொண்டுள்ளதாகச் சொன்னார்.
சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் சிறப்பாக வளர்ந்து வருவதற்கு 2015இலும் 2018இலும் செய்துகொண்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
முதல் நீர்மூழ்கிக் கப்பல் 'இன்வின்சிபல்' 2019ஆம் ஆண்டில் செயல்பட ஆரம்பித்தது. நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் 'இனிமிட்டபல்' தற்போது கட்டப்பட்டு வருகின்றது.
முன்பு 'ஃபோர்மிடபல்-கிளாஸ்' போர்க்கப்பலில் பணியாற்றிய 2ஆம்நிலை ராணுவ நிபுணர் நவின்ராஜ் சந்திரசேகரன், 29, தற்போது நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றுகிறார். அவர் கடலுக்கு அடியிலுள்ள கடற்படை கட்டமைப்பை செயல்படுத்தும் நிபுணராக செயல்படுகிறார்.
"போர்க்கப்பலில் பணியாற்றிய காலத்தில் என் கண்களை, அதாவது எனது 'ரேடாரை' பயன்படுத்துவேன். நீர்மூழ்கிக் கப்பலில், என் செவிகளை, அதாவது 'சொனாரை' பயன்படுத்திச் செல்கிறேன்," என்றார் நவின். 2011ல் சிங்கப்பூர் குடியரசு கடற்படையில் சேர்ந்த நவின், பட்டயக் கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் ஆர்எஸ்எஸ் ஃபோர்மிடபல் கப்பலில் பணியாற்றினார். 2019ல் நீர்மூழ்கிக் கப்பலில் செல்வதற்கான தகுதியைப் பெற்று கடற்படை கட்டமைப்பை செயல்படுத்தும் நிபுணரானார்.
செய்தி: மாதங்கி இளங்கோவன்
mathangielan@sph.com.sg

