மாதங்கி இளங்கோவன்
தேசியக் கொடி போர்த்தப்பட்ட முதல்நிலை சார்ஜண்ட் எட்வர்ட் எச். கோவின் நல்லுடல் தாங்கிய சவப்பெட்டி மண்டாய் தகனச்சாலையில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனத்தில் ஏற்றப்பட்ட தருணம் மழை கொட்டத் தொடங்கியது.
மத்திய தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் ஹெண்டர்சன் சாலையில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட தீச்சம்பவத்தில் எட்வர்டுடன் இணைந்து பணியாற்றிய தீயணைப்பு வீரர்களும் சவப்பெட்டியைச் சுமந்தனர். ரெட் ரைனோ என்னும் இலகுரக தீயணைப்பு வாகனத்துடன் இணைக்கப்பட்ட இறுதி ஊர்வல வண்டிக்குள் சவப்பெட்டி ஏற்றப்பட்டது. சிங்கப்பூர் காவல்துறையின் இசைக்குழு ஊர்வலத்தை வழிநடத்தியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் குடிமைத் தற்காப்புப் படையின் முதலாம் படைப் பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளும் இறுதிச் சடங்கு நடைபெற்ற மண்டபத்தை நோக்கிய பாதையில் வரிசையாக நின்றனர்.
மறைந்த அதிகாரிக்கு மரியாதை செலுத்துவதற்கு நேற்று காலை அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமையகத்திலும் ஐந்து பிரிவுகளின் தலைமையகங்களிலும் குடிமைத் தற்காப்பு பயிலகத்திலும் தீயழைப்பு மணிகள் ஒலித்தன.
மண்டாய்க்குச் செல்வதற்கு முன் சின் மிங் டிரைவில் உள்ள டிரினிட்டி காஸ்கெட் வளாகத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சார்ஜண்ட் கோவைத் தாங்கிய சவப்பெட்டியின் மேல் தேசியக் கொடி போர்த்தப்பட்டது. பின்னர் நல்லுடல் மண்டாய் தகனச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, குடிமைத் தற்காப்புப் படையின் வாகனத்தில் ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில் சார்ஜண்ட் கோவின் குடும்பத்தினர், நண்பர்களுடன் உள்துறை துணை அமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராஹிம், 250 குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சார்ஜண்ட் கோவின் பெற்றோ ரிடம் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையர் எரிக் யாப் தேசியக் கொடியை ஒப்படைத்தார்.
மறைந்த சார்ஜண்ட் எட்வர்ட் நாட்டிற்கு ஆற்றிய சேவையை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் விதமாக 'தி லாஸ்ட் போஸ்ட் புகல் கோல்' இசை ஒலிக்கப்பட்டது. பின்னர் அன்னாரின் நல்லுடன் தகனம் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையர் எரிக் யாப், "சார்ஜண்ட் கோ தம் சேவையில் ஆகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளார். மிக உன்னத உயிர்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார். அவர் என்றும் நம் நினைவில் இருப்பார்," என்று கூறினார்.
எட்வர்ட்டுக்கு முதல்நிலை சார்ஜண்ட் பதவி - 2ஆம் பக்கம்

