சிங்கப்பூரின் அடுத்த ஆண்டு பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் குறைத்து உள்ளனர். உலகப் பொருளியல் வளர்ச்சி மெதுவடையக்கூடும் என்பதை அதற்கு அவர்கள் முக்கிய காரணமாகக் குறிப்பிட்டு உள்ளனர்.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 1.8 விழுக்காடு என்ற அளவிலேயே வளரும் என்பது நிபுணர்களின் ஆக அண்மையக் கணிப்பு.
இந்த விகிதம் இதற்கு முன்னர் 2.8 விழுக்காடு என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தனியார் துறை பொருளியல் நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆக அண்மை ஆய்வின் முடிவுகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்டது. வெளிப்புற வளர்ச்சி குறையக்கூடும் என்ற தகவலால் இவர்களின் கணிப்பு மாறியுள்ளது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில் சீனாவின் கடுமையான கொவிட்-19 முடக்கக் கட்டுப்பாடுகளின் தாக்கங்களும் அதனால் ஏற்பட்ட சமூக அமைதியின்மையும் உலக வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை என்ற ஆணையத்தின் ஆய்வறிக்கைக் குறிப்பிடுகிறது.
சீனா அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்த தொடங்குவதற்கு முன்னர், அதாவது நவம்பர் 23ஆம் தேதி ஆய்வறிக்கை தயாரிக்கத் தொடங்கப்பட்டு விட்டது.
எனவே, சீனாவின் கடுமையான கொவிட்-19 கட்டுப்
பாடுகளின் தாக்கம் அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நிலவரம் மோசமடைந்து வருவதையொட்டியும் சிங்கப்பூர் வளர்ச்சியின் முன்னுரைப்பு குறைக்கப்பட்டு உள்ளது. உக்ரேன் போரின் விளைவுகள், அமெரிக்க மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கை ஆகியவற்றால் பொருளியல் மந்தநிலை தலையெடுக்கலாம் என முன்னேறிய பொருளியல் நாடுகள் பல எதிர்பார்க்கின்றன.
இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் வளர்ச்சி 0.5 விழுக்காட்டிற்கும் 2.5 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டு இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு கடந்த மாதம் முன்னுரைத்து இருந்தது. இவ்வாண்டில் முன்னுரைக்கப்பட்ட 3.5 விழுக்காட்டைக் காட்டிலும் இந்த விகிதம் குறைவு.
அடுத்த ஆண்டிற்கான முன்னுரைப்பு இவ்வாண்டின் முன்னுரைப்பைக் காட்டிலும் பாதியளவே என்றது ஆணையத்தின் ஆய்வறிக்கை.
இவ்வாண்டிற்கான முன்னுரைப்பு 3.6 விழுக்காடு என்று சொல்லப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டில் அது 1.8 விழுக்காடாகக் குறையும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
அதேபோல, அடுத்த ஆண்டில் சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்க விகிதம் 4 விழுக்காடாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த முன்னுரைப்பு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 7 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காட்டுக்கு உயரவிருக்கும் ஜிஎஸ்டியை ஒத்து இருக்கும் என்று தனியார் துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தங்குமிடச் செலவு, தனியார் போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றைத் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் 5 விழுக்காட்டைத் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாண்டு முழுமைக்குமான மூலாதாரப் பணவீக்கத்திற்கான சராசரி முன்னுரைப்பு 3.8 விழுக்காட்டிலிருந்து 4.1 விழுக்காட்டுக்குத் திருத்தப்பட்டு இருந்தனது.
அதேபோல அனைத்தையும் உள்ளடக்கிய, ஆண்டு முழுமைக்குமான பணவீக்க விகிதம் இதற்கு முன்னர் கணிக்கப்பட்ட 5.7 விழுக்காட்டிலிருந்து 6.1 விழுக்காட்டுக்கு அதிகரிக்கப்பட்டது.
ஆய்வில் 21 பொருளியல் நிபுணர்களும் பகுப்பாய்வாளர்களும் பங்கேற்றனர். உலகப் பொருளியல் மந்தமே 2023ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் வளர்ச்சியைக் கீழிறக்கக்கூடியதாக இருக்கும் என்று ஆய்வில் பங்கேற்றோரில் 62.5 விழுக்காட்டினர் கூறியிருந்தனர்.
மேலும், இதுவே ஆக அதிக அக்கறைக்குரிய அம்சம் என 31.3 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.
உலக நிலவரத்தால் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சி சுருங்கும் என முன்னுரைப்பு

