குடியிருப்புகளுக்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்தப்போவதில்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார். அதேநேரம் பெருநிறு
வனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்
களுக்கு அளிக்கப்பட்டு வரும் மின்கட்டணச் சலுகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் அவர் நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், "தேவையுள்ளோருக்கு உதவிகள் போய்ச் சேருவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும். பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதியில் ஈடுபடும் பெருநிறுவனங்களுக்கும் சலுகை வழங்கப்படக்கூடாது என அரசாங்கம் கருதுகிறது. இருப்பினும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான உதவிகள் எதுவும் பாதிக்கப்படாது. பொதுமக்களுக்கு சுமை ஏற்றக்கூடாது என்னும் எங்கள் முடிவில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பெருநிறுவனங்களுக்கான கட்டண உயர்வு படிப்படியாகவும் நியாயமாகவும் வர்த்தகங்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையிலும் மேற்கொள்ளப்படும்.
"2023ல் மின்கட்டணச் சலுகையால் அரசாங்கத்துக்கு 30 பில்லியன் ரிங்கிட் (S$9.2 பில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு குறைந்த வருமானக் குழுவினரைப் பாதிக்காத வகையில் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் தலையாய குறிக்கோள்," என்று திரு அன்வார் தெரிவித்தார். இரு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் பொறுப்பேற்ற நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு அன்வார், உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பது தொடர்பான வழிமுறைகளை வகுக்க சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு இருவாரம் கெடு அளிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார்.
அதேநேரம் வசதியானவர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பீன்சுக்கு அடுத்த நிதிப் பற்றாக்குறை உள்ள நாடாக மலேசியா உள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலையை சந்தை விலைக்குக் கீழ் வைத்திருப்பதால் அதன் வரவுசெலவுத் திட்டத்தில் செலவுகள் மிகுந்து இருப்பதைக் காணமுடிகிறது.
இவ்வாண்டுக்கான உதவித் திட்டங்களுக்கு மட்டும் 80 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாதித்தொகை, எரிபொருள், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கான சலுகைகளுக்கானது.
கொள்ளைநோய்க்குப் பிறகு மலேசியப் பொருளியல் விரைவில் மீண்டபோதிலும், மக்களில் பலர் அடிப்படை உணவைப் பெறு வதற்கே சிரமப்படும் நிலை இருப்பதாகவும் பணவீக்க உயர்வும் இதற்கு ஒரு காரணம் என்றும் புளூம்பெர்க் செய்தி கூறுகிறது.

