தேசிய அளவில் நடத்தப்படும் மரபணு ஆய்வுக்கு 100,000 சிங்கப் பூரர்கள் தேவை. ஆசியாவிலும் சிங்கப்பூரிலும் நோய்களை முன்கூட்டியே கணித்து அதனைத் தடுக்கும் வழிகளை ஆராய்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இதில் பங்கேற்க வருமாறு சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மரபணு ஆய்வை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் பேசிய ஆய்வை வழிநடத்தும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் லீ கோங் சியா மருத்துவப் பள்ளி பேராசிரியர் ஜான் சேம்பர்ஸ் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நாற்பது வயதுக்குட்பட்ட வேலை செய்யும் நபர்கள், குறிப்பாக ஆண் களுக்கு நேரமின்மை காரணமாக ஆய்வில் பங்கேற்பது சிரமம் என்று அவர் குறிப்பிட்டார்.
பரிசோதனைகளுக்கு குறைந்தது ஐந்து மணி நேரம் தேவைப் படுவதே அதற்கு காரணம்.
'எஸ்ஜி100கே' (SG100K) எனும் ஆய்வு முடிவுறும்போது சிங்கப்பூரின் ஆகப்பெரிய தரவுத் தொகுப்புகளில் ஒன்றாக அது இருக்கும்.
அடுத்த முப்பது ஆண்டுகளில் சிங்கப்பூரர்களிடையே மரபணுவை அடிப்படையாகக் கொண்ட நோய் களைப்பற்றிய தகவல்களை அது கொண்டிருக்கும்.
கடந்த ஜனவரி மாதம் ஆய்வில் ஆட்களைச் சேர்க்கும் பணி தொடங்கியது. ஆனால் இதுவரை 20,000 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர் என்று பேராசிரியர் சேம்பர்ஸ் கூறினார்.
ஆய்வுக்குத் தலைமையேற்றுள்ள துல்லிய சுகாதார ஆய்வகத்தின் தலைமை அறிவியல் ஆய்வாளருமான அவர், மேலும் 50,000 பேர் இதற்கு முன் ஆய்வில் பங்கேற்ற தொகுப்பிலிருந்து சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
லீ கோங் சியா மருத்துவப் பள்ளி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளி, சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையம், சிங்கப்பூர் இதய சிகிச்சை நிலையம் ஆகியவை பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இதிலிருந்து 50,000 பேர் மரபணு ஆய்வுக்குத் திரட்டப்பட்டுள்ளனர்.
"இந்த ஆய்வு, ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்கும். சிங்கப்பூர் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் இதில் இணைப்பது மிகவும் முக்கியம். ஏழையோ, பணக்காரரோ, இளையரோ, முதியவரோ, பெண்களோ, ஆண்களோ, அது மட்டுமல்லாமல் வெவ்வேறு சமுதாய, கலாசாரப் பின்னணிகளைக் கொண்ட அனைவரும் ஆய்வில் உள்ளடக்கப்படுவர்," என்று அவர் கூறினார்.
"மனித ஆரோக்கியம், நோய்கள் தொடர்பான பெரும்பாலான கல்வியறிவு மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்தவை. ஆனால் ஆசிய மரபணுவின் சிறப்பு அம்சங்கள், வாழ்க்கைப் பாணி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் போன்றவை தெளிவாக இல்லை," என என்டியூவின் சுகாதார, உயிர் அறிவியல் பிரிவின் மூத்த உதவி தலைவர் பேராசிரியர் ஜோசப் சங் தெரிவித் தார்.
நாற்பது விழுக்காடு இந்திய, மலாய் பங்கேற்பாளர்கள் இருப்பதால் ஆசியாவின் பரந்த அளவிலான முன்னணி மரபணு தரவுத் தொகுப்பாக இந்த ஆய்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 30,000 பேரை சேர்க்க திட்ட மிடப்பட்டுள்ளது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் தெரிவித்தது.

