கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக மூன்று ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு செம்பவாங்கில் புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையம் நேற்று குடியிருப் பாளர்கள் புடைசூழ ஆரவாரத்துடன்
திறக்கப்பட்டது.
செம்பவாங்கில் இத்தகைய வசதி ஒன்று அமைவது 30 ஆண்டு களில் இதுவே முதல்முறை.
சொங் பாங் கிராமத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த இடத்தில் செயல்பட்ட ஈரச்சந்தையும் உணவங்காடி நிலையமும் 1980களில் இடிக்கப்பட்டன. தற்போது இந்த இடம் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது.
புக்கிட் கேன்பரா உணவங்காடி நிலையத்தில் நேற்று பேசிய சுகாதார அமைச்சரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரு மான ஓங் யி காங், இந்த உணவங்காடி நிலையத்தில் ஆர்வமுள்ள பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"வாழ்க்கைச் செலவு எப்போதும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்த உணவங்காடி மூலம் குடியிருப் பாளர்களுக்கு உணவு விலையைக் குறைக்க முடியும்," என்றார்.
புதிய உணவங்காடி நிலையத்தில் ஏறக்குறைய 800 இருக்கை வசதிகளுடன் 44 கடைகள் செயல் படுகின்றன. நான்கு ஹலால் உணவுக் கடைகளும் நான்கு இந்திய உணவுக் கடைகளும் இங்கு உள்ளன. வெவ்வேறு ஆசிய உணவுகளை விற்கும் பல கடைகளும் இங்கு செயல்படுகின்றன.
சுமார் பத்து விழுக்காடு கடைகளை செம்பவாங் குடியிருப்பாளர்கள் நடத்துவது இதன் சிறப்பு அம் சங்களில் ஒன்று.
நேற்று காலை உணவங்காடி நிலையம் திறக்கப்பட்டதும் பெரும்பாலான மேசைகள் நிரம்பிவிட்டன. சில கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.
நீண்டகாலத்திற்குப் பிறகு வந்துள்ள உணவங்காடி நிலையத் தால் செம்பவாங் வட்டாரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
"என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தொலைவில் உள்ள இங்கு வகை, வகையான உணவு விற்கப் படுகின்றன," என்று 27 வயது மென்பொருள் பொறியாளர் ஜோஷுவா படுலா தெரிவித்தார்.
"நீண்டகாலமாக இதற்காகக் காத்திருந்தேன். குடியிருப்பாளர் களும் எப்போது திறப்பார்கள் என்று காத்துக்கிடந்தனர்," என்றார் அவர்.
பல்நோக்கு மண்டபம், நீச்சல் வளாகம், பலதுறை மருந்தகம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங் கிணைக்கப்பட்ட புக்கிட் கேன்பரா விளையாட்டு மற்றும் சமூக மையத்தின் ஒரு பகுதியாக புதிய உணவங்காடி நிலையம் இடம் பெற்றுள்ளது.
நீச்சல் வளாகமும் உடற்பயிற்சிக் கூடமும் அடுத்த ஆண்டு முதற் பாதியில் தயாராகிவிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பல்நோக்கு மண்டபம் ஏற்கெனவே திறக்கப்பட்டு உள்ளது. இதர வசதிகளும் படிப்படியாகத் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

