மலேசிய நிலச்சரிவு: ஒன்பது பேரை மீட்க ரேடாருடன் முயற்சி

2 mins read
b7bcde45-0ff4-464d-b396-66c07f7e4786
-

மலே­சி­யா­வில் முகா­மி­டம் ஒன்­றில் ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் காணா­மல் போயுள்ள ஒன்பது பேரை தேடும் பணி மூன்றாவது நாளாக நேற்று நீடித்­தது.

அவர்­களை மீட்க இயன்றவரை அனைத்து முயற்­சி­க­ளை­யும் மலேசிய அதி­கா­ரி­கள் எடுத்து வரு­கி­றார்­கள். மண்­ணில் புதை­யுண்டு இருக்­கும் பொருள்­க­ளைக் கண்டு­பி­டிக்­கக்­கூ­டிய ரேடார் சாத­னங்­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சிலாங்­கூர் மாநில தீய­ணைப்பு, மீட்­புத் துறைத் தலை­வர் நெரா­ஸாம் காமிஸ் நேற்று தெரி­வித்­தார்.

''இன்­ன­மும் காணா­மல் போய் இருப்­ப­வர்­களை மீட்க அனைத்து வளங்­க­ளை­யும் பயன்­ப­டுத்தி வரு­கி­றோம். சம்­ப­வம் நிகழ்ந்த இடம் மேடு பள்­ள­மாக இருப்­ப­தால் ரேடார் சாத­னத்தைப் பணி­யில் இறக்­கு­வது சிர­ம­மாக இருக்­கிறது. இருந்­தா­லும் இந்த முயற்­சி­யில் அது தேவைப்­படு­கிறது,'' என்று அவர் கூறினார்.

தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் இருந்து வடக்கே சுமார் 50 கி.மீ. தொலை­வில் இருக்­கும் பிர­ப­ல­மான உல்­லாச பொழு­து­போக்கு குன்று அமைந்­துள்ள பாத்­தாங் காலி­யில் முகாம்­களில் வெள்ளிக்கிழமை பல ரும் தூங்­கிக்கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென நிலம் சரிந்­து­விட்­டது.

அந்­தப் பயங்கர சம்­ப­வத்­தில் 94 பேர் சிக்­கிக்­கொண்­ட­னர். அவர்­களில் இளம் பிள்­ளை­க­ளைக் கொண்ட குடும்­பத்­தி­னர், தொடக்­கப்­பள்ளி ஒன்­றைச் சேர்ந்த ஆசிரி­யர்­கள் ஆகி­யோ­ரும் உள்­ள­டங்கு­வர் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

பிறகு 61 பேர் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­ட­னர். குறைந்­த­பட்­சம் 24 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர். இன்­ன­மும் ஒன்­பது பேரைக் காண­வில்லை என சிலாங்­கூர் மாநில தீய­ணைப்பு, மீட்­புத் துறை கூறியது.

அந்த நிலச்­ச­ரி­வில் மாண்­ட­வர்­களில் ஏழு பேர் சிறார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மண்­ணில் புதைந்து இருப்­போரை மீட்­கும் பணி­யில் ஒன்­பது தீய­ணைப்பு, தேடி மீட்­புத் துறையின் மோப்ப நாய்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. எட்டு நிலம் தோண்­டும் இயந்­தி­ரங்­களும் பயன்­ப­டுத்­தப்­படு­வ­தாக நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

காவல்­து­றை­யி­னர், ராணு­வத்­தினர் மீட்­புப் பணி­களில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள். பல்­வேறு துறை­களை­யும் சேர்ந்த 700க்கும் மேற்­பட்­ட­வர்­கள் மீட்­புப் பணி­யில் ஈடு­படுத்­தப்­பட்டு உள்­ள­னர்.

அதேவேளையில், இனி­மேல் யாரை­யும் உயி­ரோடு மீட்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் குறைந்து வருவதாக தீய­ணைப்­புத் துறை தெரி­வித்­தது.

இத­னி­டையே, நிலச்­ச­ரி­வில் மண்­ணில் புதைந்­த­வர்­க­ளால் மூச்சு­விட முடி­யாது. அதோடு மட்­டு­மல்­லா­மல் மண்­ணின் எடை கார­ண­மாக அவர்­கள் கீழ்­நோக்கி அழுத்­தப்­ப­டு­வார்­கள் என்று திரு நெரா­ஸாம் காமிஸ் விளக்கினார்.

ஜென்­டிங் ஹைலண்ட் அருகே நிகழ்ந்த அந்த நிலச்­ச­ரி­வில் ஏறக்­கு­றைய 450,000 கன மீட்­டர் மண் சரிந்து இருப்­ப­தாக முதற்­கட்ட புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

அந்த நிலம், 30 மீட்­டர் உய­ரத்­தில் இருந்து சரிந்து சுமார் 0.4 ஹெக்­டர் பரப்­ப­ள­வுள்ள இடத்தை அப்­ப­டியே மூடி­விட்­டது என்­றும் மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

சம்­ப­வம் நிகழ்ந்த முகாம் இடத்தை நிர்­வ­கித்து நடத்­தும் நிர்­வாக அதி­காரி, நிறு­வ­னத்­தின் இரண்டு ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரிடம் இருந்து காவல்­துறை வாக்­கு­மூலங்­க­ளைப் பெற்று இருக்­கிறது.