பாலியல் பலாத்காரக் குற்றச்செயல்களில் ஈடுபடும் 50 வயதுக்கு மேற்பட்டோரை பிரம்படி தண்டனையில்இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் அறைகூவல் விடுத்துள்ளார்.
நேற்று வெளியிட்ட தனது ஃபேஸ்புக் பதிவில் குழந்தைகள் தொடர்பான அண்மைய பாலியல் குற்றச்செயல்கள் மனதைப் பாதிப் பதாக தெரிவித்தார்.
சொந்த வீட்டிலேயே உறவினர்களால் குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டப்படி ஐம்பது வயது மேற்பட்டவர் களுக்கு பிரம்படி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள், ஐம்பது வயதைத் தாண்டிவிட்டார்கள் என்பதற்காக பிரம்படியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடும் அதிர்ச்சியைத் தரக்கூடிய கொடூரமான பாதிப்பை அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றனர். சில சம்பவங்களில் முன்பு செய்த பாலியல் வன்புணர்வுக் குற்றச்செயல்கள் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஐம்பது வயது ஆனபிறகே தெரிய வருகிறது.
"இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்றார் அவர்.
"பாலியல் செயல்களுக்கு குறிவைக்கும் நபர்களிடமிருந்து குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்.
"குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிப்பது அவசியம். குழந்தைகளைப் பாலியல் பலாத்காரத்திலிருந்து பாதுகாக்க அதிக வழிகள் கண்டறியப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதுபோன்ற பல குற்றச்செயல்கள் புகார் அளிக்கப்படாமல் இருந்திருக்கலாம் என்று கவலை தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட இளம் குழந்தைகளின் வேதனையையும் பாதிப்பையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
இதுவரை புகாரளிக்கப்பட்ட சம்பவங்களில் சில ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் தெரி வித்தார்.
"பாதிக்கப்பட்டவர்கள் இளம் வயதிலிருந்தே பாலியல் வன்முறை நோக்கம் கொண்டவர்களால் வளர்க்கப்படுகின்றனர். அவர்கள் தந்தையாகவோ, வளர்ப்புத் தந்தையாகவோ அல்லது ஆண் உறவினராகவோ இருக்கின்றனர். இதனால் இளம் வயதினருக்கு எதிரான தங்களுடைய குற்றச்செயல் சாதாரணமானது என்று அவர்கள் கருதுகின்றனர்.
"பாதிக்கப்பட்ட பலர் இத்தகைய செயல்கள் தவறு என்பதை பள்ளியில் பாலியல் கல்விக்குப் பிறகே உணர்ந்துகொள்கின்றனர்.
"இளம் வயதினரின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி இதெல்லாம் தவறான செயல் அல்ல என்று கூறி தங்களுடைய இச்சைக்கு அவர்களை பாலியல் வன்கொடுமைக்காரர்கள் பணிய வைக்கின்றனர். சில சம்பவங்களில் குடும்பம் உடைந்துவிடுமோ அல்லது வீட்டுக்கு சம்பாதிப்பவரை இழந்துவிடுமோ என்று அஞ்சி பாதிக்கப்பட்ட சிலர் புகார் அளிப்பது இல்லை. சில வேளைகளில் மிரட்டலுக்காக பாதிக்கப்பட்டவர்கள் மௌனமாகி விடுகின்றனர்," என்று அவர் தெரிவித்தார்.
'பேவ்' போன்ற சமூக சேவை அமைப்புகள், அரசாங்க அமைப்புகளுடன் சேர்ந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிகளைக் கண்டறியலாம் என்று யோசனை வழங்கிய அதிபர் ஹலிமா, "குழந்தைகளைப் பாதுகாப்பது நமது கடமை, அதில் தோல்வியடைந்து விடக்கூடாது," என்று குறிப்பிட்டார்.
பாலியல் பலாத்கார குற்றச்செயல் தொடர்பான சட்டத்தைத் திருத்த அதிபர் வேண்டுகோள்

