மலேசிய நாடாளுமன்றம், அடுத்த ஆறு மாத அரசாங்க செலவினங்களுக்கான மலேசிய ரிங்கிட் 107 பில்லியன் (32 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள தற்காலிக மத்திய துணை வரவுசெலவுத் திட்டத்தை நேற்று அறிவித்துள்ளது.
இந்த துணை மசோதா நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வாய்மொழி வாக்குகள் மூலம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டம் இல்லாமல் இருப்பதால் அரசாங்கம் முடங்குவதைத் தவிர்க்க இருப்பிலிருந்து நிதி எடுக்க இத்திட்டம் வழிவகுக்கும்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம், உபகாரச் சம்பளம், சமூக நலத் தொகை போன்றவற்றை வழங்கவும் மருத்துவ, கல்வித் துறைகள் தங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறவும் இந்தத் தற்காலிக சிறிய வரவு செலவுத் திட்டம் அனுமதிக்கும்.
நிலுவையில் உள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடரவும் அரசாங்கத்தின் அவசரச் செலவுக்கான தொகை கையிருப்பில் இருக்கவும் இந்த வரவுசெலவுத் திட்டத்தை உடனடியாக அங்கீகரிப்பது முக்கியம் என்று மலேசியாவின் பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார் இப்ராகிம் கூறினார். 2023ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு செலவுத் திட்டம் ஆண்டின் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் சொன்னா்.
இத்திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள மேம்பாட்டுக்கான அவசர செலவினங்களுக்காக நாட்டின் மேம்பாட்டு நிதியிலிருந்து 56 பில்லியன் ரிங்கிட் தொகையை எடுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
முன்னதாக தேசிய முன்னணி அரசாங்கம் அக்டோபர் 2023க்காக தாக்கல் செய்திருந்த 372 பில்லியன் ரிங்கிட் வரவுசெலவுத் திட்டம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் நிறைவேற்றப்படவில்லை.
முகைதீன் மீது அன்வார் வழக்கு
அன்வார், சிலாங்கூருக்கான பொருளியல் ஆலோசகராக இருந்தபோது அவருக்கு 15 மில்லியன் ரிங்கிட் (S$4.6 மி.) வழங்கப்பட்டதாக கூறியதற்காக முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீது திரு அன்வார் வழக்குத் தொடுத்துள்ளார்.
முகைதீனை நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகுமாறு எஸ்என் நாயர் அண்ட் பாட்னர்ஸ் சட்ட நிறுவனம் உயர் நீதிமன்ற பதிவகத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.
பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் அஸ்மான் நஸ்ருதீனை ஆதரித்து டிசம்பர் 5ஆம் தேதி கெடாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முகைதீன் அவ்வாறு கூறியதாக அன்வார் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்திட மிருந்து மில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறும் முகைதீனின் தவறான சொற்கள், தாம் நம்பகத் தன்மை யற்றவர், உண்மைக்குப் புறம்பானவர் என தம்மைக் காட்சிப்படுத்துவதாக உள்ளன என்றார் அன்வார்.

