சீனாவில் தொற்று அதிகரித்து வருவதையடுத்து உலக சுகாதார நிறுவனம் கருத்து
மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய அலை சீனாவில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுவது, கொவிட்-19 பெருந்தொற்று தொடர்பான உலகளாவிய அவசரநிலையை முடிவிற்குக் கொண்டுவருவதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இப்போதைக்கு அத்தகைய அறிவிப்பை வெளியிடுவது சரியான முடிவாக இராது என்று முன்னணி அறிவியல் வல்லுநர்கள் பலரும் உலக சுகாதார நிறுவன ஆலோசகர்களும் தெரிவித்து இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் பொதுமக்கள் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து, கொவிட்-19 தொற்றை அறவே ஒழிப்பது என்ற கொள்கையைச் சீனா தளர்த்திவிட்டது.
இந்தத் திடீர் நிலைப்பாட்டு மாற்றம் காரணமாக அங்கு மீண்டும் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளது.
அங்கு தடுப்பூசி போடும் விகிதமும் குறைவாக இருப்பதால் அங்கு 2.1 மில்லியன் பேர்வரை இறக்கும் அபாயம் இருப்பதாக 'ஏர்ஃபினிட்டி' எனும் உலக சுகாதாரப் புலனாய்வு, பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
"சீன மக்கள் குறைந்த நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டுள்ளனர். உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட சினோவேக், சினோஃபார்ம் தடுப்பூசிகளை அவர்கள் போட்டுக்கொண்டுள்ளனர். அவற்றின் செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவு குறைவு என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன," என்று ஏர்ஃபினிட்டி நிறுவனம் கூறி இருக்கிறது.
இதன் காரணமாக, ஹாங்காங்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்டது போன்ற தொற்று அலை சீனாவிலும் உருவாகலாம் என்றும் அதனால் 167 மில்லியன் முதல் 279 மில்லியன் பேர்வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதனால், கொவிட்-19 தொற்றை அறவே ஒழிப்பது என்ற தனது கொள்கையைத் தளர்த்துமுன், சீனா தடுப்பூசி போடும் விகிதத்தை முடுக்கிவிடுவது அவசியம் என்று ஏர்ஃபினிட்டி நிறுவனத்தின் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தொற்றியல் பிரிவின் தலைவர் டாக்டர் லூயி பிளேர் அறிவுறுத்தி இருக்கிறார்.
முன்னதாக, தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த திங்கட்கிழமையன்று கொரோனாவால் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொவிட்-19 பரவத் தொடங்கியதில் இருந்து இப்போதுதான் அந்நகரில் மோசமான தொற்று அலை வீசிவருவதாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் 7ஆம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் கொரோனா மரணம் பதிவாகி இருப்பது இதுவே முதன்முறை என்று சிஎன்என் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றியோர் வேலைக்குத் திரும்பலாம்
இந்நிலையில், இலேசான தொற்று அறிகுறிகள் இருப்போர் வேலைக்குத் திரும்பலாம் என்று சில சீன நகரங்கள் அறிவித்துள்ளன. தொற்று அறிகுறிகள் ஏதுமின்றி அல்லது லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லலாம் என்று சொங்சிங் நகர அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்தனர். அதுபோல, சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியான ஸைஜியாங் நகரிலும் கொவிட்-19 தொற்றியோர் வேலைக்குத் திரும்பலாம்.
உதவ தயார்: அமெரிக்கா
இதனிடையே, கொவிட்-19 பரவல் அதிகரிப்பை எதிர்கொண்டுவரும் சீனாவிற்கு உதவ தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலாமல் போனால் அது உலகப் பொருளியலிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிடலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
"கொவிட்-19 சார்ந்த சுகாதார ஆதரவு தொடர்பில், சீனா உள்ளிட்ட நாடுகளுக்குத் தொடர்ந்து உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களைப் பொறுத்தமட்டில், இது அரசியல் சார்ந்ததோ புவிசார் அரசியல் சார்ந்ததோ இல்லை," என்று அமெரிக்க உள்துறை அமைச்சின் பேச்சாளர் நெட் பிரைஸ் கூறியிருக்கிறார்.

