இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின்பேரில் குடிநுழைவு சோதனைச்சாவடிகளில் 69 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கைதுசெய்யப்பட்டனர் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டைக்காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு அதிகம். சென்ற ஆண்டில் உள்ளூரைச் சேர்ந்த ஆறு போதைப்புழங்கிகள் சாங்கி விமான நிலையத்திலும் மற்ற சோதனைச்சாவடிகளிலும் பிடிபட்டனர்.
அதற்கு முந்திய 2020ஆம் ஆண்டில் இதே காரணத்திற்காக 30 பேர் கைதாகினர்.
அதே நேரத்தில், கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்பிருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் இது குறைவுதான். கடந்த 2019ஆம் ஆண்டில், சோதனைச்சாவடிகளில் 132 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் போதைப்பொருள் புழங்கியதற்காகக் கைதுசெய்யப்பட்டனர்.
எல்லாச் சோதனைச்சாவடிகளிலும் அமலாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்துடன் சேர்ந்து அவ்வப்போது சோதனை நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டு வருவதையும் அது பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
“சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டங்களை மீறுவோர்மீது கடுமையான அமலாக்க நடவடிக்கையை எடுக்கத் தயங்கமாட்டோம்,” என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாட்டில் இருக்கும்போது போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டம் 8ஏ பிரிவின்கீழ் அவர்கள் தண்டிக்கப்படலாம்.
போதைப்பொருள் உட்கொண்டது சிறுநீர்ப் பரிசோதனையில் உறுதியானால், அவர்கள் தண்டனையை எதிர்நோக்கலாம்.
இவ்வாண்டு மார்ச் 22ஆம் தேதியிலிருந்து, 30க்கும் மேற்பட்ட போதைப்பொருள்களை உடனடியாகக் கண்டறியக்கூடிய கையடக்க போதைப்பொருள் சோதனைக் கருவியைப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன், ஒருவர் சிறிய அளவு போதைப்பொருள் வைத்திருந்தாலும் கண்டுபிடிக்கக்கூடிய ‘அயன்ஸ்கேன்’ கருவியையும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் சோதனைச்சாவடிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூரின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டபின், பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
சாங்கி விமான நிலையம் வழியாக அன்றாடம் 150,000 பேர் பயணம் செய்கின்றனர் என்றும் வாரந்தோறும் ஒரு மில்லியன் பேர் பயணம் செய்கின்றனர் என்றும் இம்மாதம் 18ஆம் தேதி போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இது, கொவிட்-19 பரவலுக்கு முன்பிருந்த நிலையில் கிட்டத்தட்ட 75% எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், இவ்வாண்டு ஜனவரி-நவம்பர் காலகட்டத்தில், சாங்கி விமான நிலையத்தில் 300க்கும் அதிகமான கூட்டு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. அங்கு பயணிகளிடம் 5,400க்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே காலகட்டத்தில், மற்ற சோதனைச்சாவடிகளில் 400க்கும் அதிகமான கூட்டு அமலாக்க நடவடிக்கைகள் இடம்பெற்றன; பயணிகளிடம் 27,000க்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.