உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கி 300 நாள்கள் நிறைவடைந்த நிலையில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முதல்தடவையாக உதவிநாடி அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து உதவி கேட்பது அவரது அந்தப் பயணத்தின் நோக்கம். இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அமெரிக்க நாடாளு மன்றத்தில் உரையாற்றிய திரு ஸெலென்ஸ்கி, 44, பத்து அம்ச அமைதித் திட்டம் ஒன்றை அதிபர் பைடனிடம் தாம் சமர்ப்பித்து உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த அமைதித் திட்டத்தின் மூலம் வருங்காலத்தில் கூட்டு பாதுகாப்பு உத்தரவாதம் கிட்டும் என்று தாம் நம்புவதாகவும் இந்தத் திட்டத்தின் ஓர் அம்சமாக உச்சநிலை மாநாடு ஒன்று இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் அரிய வாய்ப்பு உக்ரேனிய அதிபருக்குக் கிடைத்தது.
இதற்கிடையே, செய்தியாளர்
களிடம் பேசிய அதிபர் பைடன், உக்ரேன் தன்னைத் தற்காத்துக்கொள்ள தேவைப்படும் ஆயுதங்
களையும் உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகக் கூறினார்.
இருப்பினும் எல்லா வகையான அதிநவீன ஆயுதங்களையும் உக்ரேனுக்கு வழங்கினால் ஐரோப்பாவில் அமெரிக்கக் கூட்டணிக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றார் அவர்.
அதேநேரம், போரின் இறுதி வரை உக்ரேனுக்கு அமெரிக்கா தோள்கொடுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
திரு ஸெலென்ஸ்கி தமது அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார்.
அவரது வருகையின்போது உக்ரேனுக்கு US$1.8 பில்லியன் மதிப்புள்ள கூடுதல் ராணுவ உதவி அறிவிக்கப்பட்டது. தாக்க வரும் ஏவுகணை, விமானங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதனை முறியடிக்கும் நவீன கருவியும் இந்த உதவியில் அடங்கும்.
ஆனால், உக்ரேனுக்கான கிட்டத்தட்ட US$50 பில்லியன் (S$67.37 பில்லியன்) உதவி அடங் கிய அமெரிக்க செலவின மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்படவில்லை.
வாக்கெடுப்பு எதுவும் நடத்தாமல் செனட்டர்கள் மன்றத்தி
லிருந்து வெளியேறிவிட்டனர்.
குடியரசுக் கட்சியின் செனட்டர்களில் சிலர், வெளிநாடுகளுக்கு அமெரிக்கா அதிக உதவி அளிக் கிறது என எதிர்ப்புக் குரல் கொடுத்து வருவதால் உக்ரேனுக்கான உதவியில் முட்டுக்கட்டை உருவாகும் சாத்தியம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில் தற்காப்பு அமைச்சில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், உக்ரேனில் தமது ராணுவத்திடம் உள்ள பல குறைபாடுகளை ஒப்புக்கொண்டார். ஆனாலும் உக்ரேன் மீதான படையெடுப்பு தொடரும் என்றார் அவர். மேற்கத்திய நாடுகள் தேவையின்றி போரைத் தூண்டுவதாக அவர் குறைபட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியது. படையெடுப்பின்போது பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியபோதிலும் அந்தப் பகுதிகளை உக்ரேன் படையினர் படிப்படியாக மீட்டு வரு
வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரேன் போரை இழுத்தடிக்க ரஷ்யா திட்டம் போடுவதாகவும் புதிய பகுதி
களைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக ஏற்கெனவே தான் கைப்பற்றிய பகுதிகளைத் தொடர்ந்து தன்வசம் வைத்துக்கொள்ள அது வியூகம் வகுத்து வருவதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

