காய்ச்சல், சளி மருந்துகளுக்கான தேவை கடந்த வாரம் திடீரென்று உயர்ந்ததைத் தொடர்ந்து ஃபேர் பிரைஸ் பேரங்காடியில் பெனடால், நியூரோஃபென் மாத்திரைகளை வாங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஒருவர் நான்கு பொட்டலங்களை மட்டுமே வாங்க முடியும். இந்தக் கட்டுப்பாடு நேற்று முன்தினம் முதல் நடப்புக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை அறிந்துகொள்ளும் வகையில் ஃபேர்பிரைஸ் பேரங்காடி நுழைவாயிலில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு உள்ளதாக பேரங்காடியின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்தத் தேவைக்கு மட்டுமே இந்த மருந்துப் பொருள்களை வாங்குமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், பெனடால் நியூரோஃபென் மாத்திரைகளுக்கு மாற்றாக இதர நிறுவனங்களின் காய்ச்சல், சளி மருந்துகளை வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த இரு மாத்திரைகளும் உள்ளூர் தயாரிப்புகள். இங்குள்ள பேரங்காடிகளிலும் மருந்துக்கடைகளிலும் மட்டுமே இவை கிடைக்கும்.
இதற்கிடையே, பெனடால் மாத்திரையைத் தயாரிக்கும் ஹேலியன் நிறுவனம், சாதனை அளவாக பெனடால் மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்து உள்ளது. இங்குள்ள சில்லறை விற்பனையாளர்கள் இந்த மாத்திரைக்கான தேவை அதிகரிப்பைச் சந்திப்பார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் அது கூறியது.
பெனடால் போன்ற சளி, காய்ச்சல் மருந்துகளுக்கான தேவை அண்மைய ஆண்டுகளாக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வாட்சன்ஸ் மருந்துக் கடைகளும் பெனடால் தயாரிப்புகளின் விற்பனைக்கு வரம்பு கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஆறு பெனடால் பொட்டலங்களை மட்டுமே இந்தக் கடைகளில் வாங்கமுடியும்.
இந்நிலையில், ஒரு மருந்துக்கான தேவை திடீரென்று அதிகரித்து அது விற்றுப்போனால் அதனை மறுபடியும் இருப்பு வைக்க அதிகக் காலம் ஆகலாம் என்றும் எனவே வாடிக்கையாளர்கள் ஒரே நிறுவனத் தயாரிப்புகளை நாடுவதற்குப் பதில் மாற்று நிறுவனத்தின் மருந்துகளையும் வாங்கலாம் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்தது.

