சீனாவில் தலைவிரித்தாடும் கொவிட்-19; அதிகாரபூர்வ தரவிற்கு முரணான சிங்டாவ் நிலவரம்
சீனாவின் சிங்டாவ் நகரில் மட்டும் நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாவதாக அந்நகரின் சுகாதாரத் துறைத் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
சீனாவில் கொவிட்-19 தொற்று வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்பட்டாலும் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் அதன் உண்மைநிலையை எடுத்துக்காட்டுவதாக இல்லை என்பதைக் குறிப்பிடுவதாக அவரது இந்த ஒப்புதல் அமைந்துள்ளது.
ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் இறங்கியதை அடுத்தும் கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்கும் நிலைப்பாட்டைச் சீனா அண்மையில் மாற்றிக்கொண்டது. திடீர் திடீரென முடக்கநிலையை அறிவித்தல், நீண்டகாலத் தனிமைப்படுத்தல், போக்குவரத்துத் தடைகள் போன்ற முக்கியக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.
இதனையடுத்து, அந்நாட்டின் பல நகரங்களிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்கள் சளி, காய்ச்சல், இருமல் மருந்துகளை வாங்கிக் குவிப்பதால் மருந்தகங்களில் அடுக்குகள் காலியாக உள்ளன. மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகனச்சாலைகளிலும் இறுதிச்சடங்கு இல்லங்களிலும் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கட்டாயப் பரிசோதனை முடிவிற்கு வந்ததால் உண்மையான பாதிப்பு நிலவரத்தைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கொவிட்-19 மரணத்திற்கான வரையறையையும் திருத்தியுள்ளதால், அதனால் இறப்போரின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படலாம் என்பது சுகாதார வல்லுநர்களின் கருத்து.
இந்நிலையில், சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சிங்டாவ் நகரில் நாள்தோறும் 490,000 முதல் 530,000 பேர்வரை கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகின்றனர் என்று அந்நகரின் சுகாதாரத் துறைத் தலைவர் டாக்டர் போ தாவ் தெரிவித்ததாக அங்குள்ள ஓர் ஊடகம் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந்தது.
அந்நகரில் இந்த வார இறுதிக்குள் பாதிப்பு விகிதம் மேலும் 10% உயரக்கூடும் என்றும் டாக்டர் போ குறிப்பிட்டிருந்தார்.
அச்செய்தியைப் பல்வேறு ஊடகங்களும் பகிர்ந்திருந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நேற்று அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் புதிதாக 4,103 பேரை கொரோனா தொற்றியிருக்கிறது என்றும் அந்நோயால் மேலும் ஒருவர்கூட இறக்கவில்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஆனால், குவாங்டோங் மாநிலம், டோங்குவான் நகரில் மட்டும் ஒருநாள் பாதிப்பு 250,000 - 300,000 என்ற அளவில் இருப்பதாக அந்நகரின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ரத்தத்திற்குக் கடும் தட்டுப்பாடு
இதற்கிடையே, சீனாவில் பல்வேறு நகரங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ரத்தத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அண்மைய நாள்களாக இரண்டு வகை ரத்தம் போதிய அளவு கையிருப்பு இல்லை என்று ஷாண்டோங் மாநில ரத்த நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்று நாள்களுக்குப் போதுமான அளவு மட்டுமே ரத்தம் கையிருப்பில் உள்ளதை இந்தச் சிவப்பு எச்சரிக்கை குறிப்பிடுகிறது.

