இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரின் கோஷாமகால் பகுதியிலுள்ள சாலை நேற்று முன்தினம் நண்பகல் நேரத்தில் திடீரென உள்வாங்கி, ஏறக்குறைய 50 மீட்டர் நீளத்திற்குப் பள்ளம் ஏற்பட்டது (படம்). இதனால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் காய்கறி வண்டிகளும் நிலைகவிழ்ந்து சேதமடைந்தன.
இவ்விபத்தில் காய்கறிக் கடைக்காரர்கள், அவர்களின் வாடிக்கையாளர்கள், அப்பகுதியில் நடந்து சென்றோர் எனப் பலரும் பள்ளத்தில் விழுந்தனர். அவர்களின் கூக்குரல் கேட்டு, அருகிலுள்ள கடைக்காரர்களும் உள்ளூர்வாசிகளும் அவர்களைக் காப்பாற்றினர். அறுவருக்குச் சிறிய அளவில் காயமேற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அந்தச் சாலைப்பகுதிக்குக் கீழே பாதாளச் சாக்கடை ஓடுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
தமது தள்ளுவண்டியையும் ரூ.5,000 மதிப்புள்ள காய்கறிகளையும் பறிகொடுத்ததால் செய்வதறியாது தவிக்கிறார் காய்கறி வணிகரான திருவாட்டி லட்சுமி. "பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதனைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வப்போது சோதித்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்காது," என்றார் அவர்.
நிகழ்விடத்தைப் பார்வையிட்ட கோஷாமகால் எம்எல்ஏ, பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களுக்கு அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

